Friday, April 14, 2006

வெற்றிப் படியேறு வெட்டித் தடை வீழ்த்தி

சிந்தனைக் கட்டுரை
- பாவன்னா பானா -

பொருளாதார வளம் கண்ட நாடுகளில் தனிமனிதர்களும் நிறுவனங்களும் தத்தமது நாடுகளை அத்தகைய நிலைக்குக் கொண்டு வர வெவ்வேறு விதமான உற்பத்தி யுக்திகளைக் கையாண்டார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு அணுகுமுறையைக் கையாள அவைகளுக்கு வெளியே ஆசியாவில் வேறொரு விதமான அணுகுமுறை கையாளப்பட்டது
குபேரர்களான யப்பானியர்களால். பொருளாக்கத்தில் செல்வச் செழிப்படைந்த இந்த இரு தரப்பினரதும் இலக்கு ஒத்ததாயினும் அதனை எட்டுவதில் அவர்களது சிந்தனைதான் வேறுவிதமாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் எனில் குறிப்பிட்ட ஒரு பயிர் இவ்வளவு சாகுபடியாக வேண்டும் அல்லது குறிப்பிட்ட ஒரு தொழிற் சாலையில் இவ்வளவு பரும்படியாக வேண்டும் என அவர்கள் நிர்ணயம் செய்தால் அந்த இலக்கை அடைவதிலே கருத்தாயிருப்பர். எந்த விதத்திலும் அந்த நினைப்பை எட்டிட எதையும் செய்யத் தயாராக இருந்தனர். அவர்களது இலக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டாயிரம் அப்பிள் பறிக்க வேண்டும் என்பதாயின் குறிப்பிட்ட அந்த ஒரு ஏக்கர் நிலம் செழிப்பானதோ இல்லையோ அதுபற்றி அவர்களுக்குக் கவலையில்லை. விளைவைப் பெருக்க செயற்கை முறையான தூண்டுதல்கள் மூலமாவது அதாவது அபரிமிதமான இரசாயன உரங்களைப் பயன்படுத்தியாவது ஏக்கருக்கு இரண்டாயிரம் அப்பிளை விளைவித்து விடுவர். அவர்களின் இந்த யுக்திக்கு பெறுபேற்று மைய அணுகுமுறை (Result oriented approach) என்பர்.

ஆனால் செல்வச் செழிப்பு மிக்க யப்பானியர்களோ அமெரிகர்கள் அல்லது ஐரொப்பியர்கள் போல் விளைவில் அதாவது முன்னர் குறிப்பிட்டது போல் ஒரு ஏக்கரில் இரண்டாயிரம் அப்பிள் பெற வெண்டும் என்பதில் குறியாக இருக்கமாட்டார்கள். பயிரிட எண்ணியதான அப்பிள் செடி என்ன மாதிரியான நிலத்தில் பயிரிட வேண்டும் எத்தனை நாளைக்கு ஒரு தடவை நீர் ஊற்ற வேண்டும் என்ற விதமாக தொகையில் குறியாயிராமல் செய்முறையில் கவனம் காட்டுவர். அதாவது எதிர் கால வாய்ப்பினை அறுவடை செய்திட. இது செயன்முறை மைய அணுகுமுறை (Process or Performance oriented approach) எனப்படுகிறது.

இதில் யப்பானியர் ஒரு ஏக்கரில் விளைவித்த அப்பிளின் எண்ணிக்கை அமெரிக்கரை விட சில வேளை குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் யப்பானியர் விளைவித்த அப்பிளில்தான் சுவை இருந்தது. நுகர்வுப் பெறுமானம் இருந்தது. பொதுவாக இரு தரப்பினர் குறிக்கோளும் பலன் கருதியதே. அதாவது செல்வமீட்டுவதே. ஆனால் அமெரிக்கரோ இது விடயத்தில் அன்றன்றையதையே அதாவது அந்தப் பலன் இப்போதே கிடைத்தால் போதும் என்பதில் சிந்திக்க யப்பானியரோ நாளையதை எண்ணிப் பார்த்தார்கள். இதில் அவ்வேளையதில் கூடிய பலன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என வைத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் கிடைக்க இருந்த வாய்ப்பு உடன் கிடைக்காத பலனை விட பன்மடங்கு கூடுதலாக அவர்களைப் போய்ச் சேர வழி சமைத்தது. இவ்விடத்து கீதையில் சொல்லப்படும் ஒரு வரி வடிவம் நினைவிற்கு வருகிறது. அதுதான் “கடமையைச் செய். பலனை எதிர் பாராதே” என்பது. இதன் கருத்து ஒன்றைச் செய்கையில் அப்போதைக்கு என்ன நடக்கும் என நிகழ் காலத்தைப் பார்க்காதே. எதிர்காலத்தில் கிடைக்க இருப்பதை மனதிற் கொண்டு செயற்படு. கீதையின் இந்த பொருளியல் அல்லது சந்தைப்படுத்தல் சிந்தனை (Economic or Marketing thinking) தெரிந்ததோ என்னவோ அதனை பொருளீட்டும் தமது முயற்சிகளில் பயன்படுத்தினார்கள் யப்பானியர்கள். இதனாலேயோ என்னவோ உலகப் படத்தில் யப்பான் என்ற ஒரு தேசம் இருக்குமோ என்று எண்ண முடியாத அளவிற்கு அமெரிக்கரால் குண்டு வீசித் துவம்சம் செய்யப்பட்ட அந்த நாடு இன்று ஒரு குபேர நாடாக வளர்ந்திருப்பதற்குக் காரணம் அந்த நாட்டவரது இவ்விதமான அணுகுமுறைத் தூர நோக்கும் மனோதிடமும்தான்.

யப்பானியர்களின் பொருளாதார வெற்றிக்கு முதுகெலும்பான இன்னொரு சிந்தனைதான் ஆக்கிய ஒரு பொருளை அல்லது ஒரு செயலை அதாகவே முன்னெடுக்காது அவ்வப்போது புதிது புதிதாக மாற்றங்களைச் செய்து சிறப்பாக்கம் செய்வது. இதனை பொருளியலில் வரும் உற்பத்திக் கொள்கை பொருட் சிறப்பாக்கம் (Product Specialization) என்கிறது. இதேவிதமாக சந்தைப்படுத்தலியலை (Marketing Science) ஐ எடுப்போமானால் அங்கும் Product Development பற்றிய பேச்சைக் காண்கிறோம். அதாவது TQM, Innovativeness, etc. இவைகள் எல்லாமே யப்பானியரின் கைசன் (Kaizen) என்ற கொள்கையில் அடங்கியவைதான். இக் கொள்கையின் தொனியாக இருப்பது "Continuous improvements of everything by every one.” அதாவது மென்மேலும் சிறப்பாக்கம் செய்வது. அதாவது ஒரு காரியத்தையோ ஆக்கும் எந்த ஒரு பொருளையோ எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அடுத்தடுத்தபோது அதையும் விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதுதான். இதற்கு நல்ல ஒரு சமகால உதாரணம்தான் அமெரிக்க யப்பான் நாடுகளின் கார்கள். இங்கு இரு நாட்டு கார்களின் சந்தை வாய்ப்பைப் பார்ப்போமானால் யப்பானிய கார்களுக்கு இருக்கும் மவுசு அல்லது மதிப்பு அமெரிக்கக் கார்களுக்கு இருக்காது. காரணம் அமெரிக்கரோ தமது கார்கள் உற்பத்தித் துறையில் புத்தாக்க உள்வாங்கலை விடுத்து அபரிமிதமாக உற்பத்தி செய்வதிலும் யப்பானியர்கள் அளவாக உற்பத்தி செய்வது ஆனால் மேலும் சிறப்பாகச் செய்வது என்பதிலும் காட்டும் இருவெறு அணுகுமுறைகள்தாம்.

யப்பானியர்களின் சாதனை அல்லது வாழ்வியல் சித்திகளுக்கு அவர்களது பிரத்தியேக ஆளுமைகளுக்கும் பங்குண்டு. அதாவது யப்பானியர்கள் வெறுமனே உடன் வெற்றி என்பதை ஒரு இலக்காகக் கொண்டு எதிலுமே களம் இறங்குவதில்லை. செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நாளையதையே நோக்கிறார்கள். அதாவது “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்” என்ற சினிமா பாடல் வரி ஒன்றில் வருமாப்போல். இதனாலேயே நாம் நம்முள் இன்னொருவரைக் காணும்போது வணக்கம் சொல்லிக் கொள்வதுபோல் அவர்களோ தம்மவருள் “வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி” என்பார்களாம். இதனாலே அவர்களுக்கு வாழ்க்கை என்பதே வெற்றியாக அமைந்து விடுகிறது.

வெற்றி என்பது பற்றிப் பேசும்போது இன்னொன்றையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். தொழில் விடயமோ அல்லது வாழ்வியலோ ஒரு முரண்பாட்டு வேளையதில் சகிப்புத் தன்மை அவசியம். இன்றேல் அங்கு பயன்தரு விளைவு என்பது எட்டாததாகிவிடும். இதையே நாம் நிருவாகவியலில் “றுin” “றுin” அநவாழன எனப் பார்க்கிறோம். சண்டை போடும் இருவர் விடயத்தில் ஒருவர் வெற்றி பெற மற்றவர் தோல்வியடைவார். இங்கு இருவருமே வெற்றி பெற முடியுமா என நம்முள் கேள்வி எழலாம். இதற்கு பதில் முன்பு குறிப்பிட்ட அந்த நிருவாகவியல் அணுகுமுறையில் ஆம் என்பதுதான். உதாரணத்திற்கு கம்பனி ஒன்றின் இரு நிருவாகிகளிடையே ஒரு விடயத்தில் முடிவு ஒன்றை எட்டும் விடயத்தில் பிரச்சினை. இருவருமே தத்தமது கருத்துகளை முன்வைத்து அவைகளை ஆராயும்போது அவருடையதா என்னுடையதா சரி என முரண்டு பிடிக்காமல் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தன்மையை மாத்திரம் கவனத்திற் கொண்டு சரியான முடிவை எட்டும்போது இருவருமே வெற்றியடைந்ததைப் போன்று கருதப்படுவர். வேலை தேடும்போது நம்மிடம் சகிப்புத் தன்மை விட்டுக் கொடுப்பு முரண்டு பிடியாமை போன்ற மனித வள முகாமைத்துவக் குணாதிசியங்களை தொழில் நிறுவனங்கள் வேண்டி நிற்பதும் பயன்தரு சுமூகமான அந்த ஒரு சூழ்நிலையை தக்க வைத்திடவே.

ஒருசிலர் அழுது புலம்புவதுண்டு. அதாவது முன்னேறப் பார்க்கிறேன். முடியவில்லை. முன்னேறத் துடிக்கிறேன். அதற்குப் பலர் தடையாக இருக்கிறார்கள். வசதி வாய்ப்புகள் இன்னும் கைகூடி வரவில்லை. என்பது போன்று. ஆனால் வெற்றியடைந்த பல தனிமனிதர்கள் ஏன் அணுவால் கதி கலங்கிய யப்பானியர்கள் விடயத்தில் நாம் கண்ட இன்னும் கண்டு கொண்டிருக்கிற சித்திகளும் சாதனைகளும் நமக்குக் காட்டுவது வெற்றிப் படி ஏற நினைத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும் என்பதே. தீப்பந்தம் ஒன்றை தலை கீழாக கவிழ்த்தாலும் அதிலிருந்து வரும் தீயின் ஜூவாலை மேல் நோக்கியே செல்லும். அதுபோலவேதான் நம்முள் இருக்கும் “வெற்றி இன்றில்லாவிடினும் நாளை அது கிடைக்கும்” என்ற வேகம் நிச்சயம் அதனை ஈட்டிட வழி நடத்தும் என முன்நகர்வோமாக. சித்தி பெற்ற மற்றையவர்களின் அணுகுமுறைகளை அல்லது அதற்காக பின்பற்றக் கூடியதான வழிமுறைகளைக் கவனத்திற்கெடுத்து.

- பாவன்னா பானா -
Quelle - சுயம்வரம் - தை-2006

Saturday, April 01, 2006

இலக்கியக்காரனின் இறுதி வார்த்தை

-அ.முத்துலிங்கம்.

சரித்திரம் என்றால் தேதிகள் என்று என் சிறுவயது ஆசிரியர் என்னை நினைக்க வைத்தார். அலெக்சாந்தரில் இருந்து ஆதித்தசோழன் வரைக்கும் தேதிகளை நான் மனனம் செய்யவேண்டும். ஒரு பாடத்தை எவ்வளவுக்கு வெறுக்கமுடியுமோ அவ்வளவுக்கு சரித்திரப் பாடத்தை வெறுத்தேன்.

வரலாறுதான் மனிதர்களின் கதை என்பதையும், மனிதர்களின் கதைதான் இலக்கியம் என்பதையும் அந்த ஆசிரியர் எனக்கு சொல்லித்தர மறந்து விட்டார். மார்க்கோபோலோவை நான் வெறுத்ததற்கும் அதுதான் காரணம். அவனுடைய தேதிகள் எல்லாம் மாறிப்போனது. பரீட்சையில் ஒருமுறைகூட அவன் எனக்குக் கைகொடுக்கவில்லை. அவனுக்கும் நான் கைகொடுக்கவில்லை.

மார்க்கோபோலோவுடைய பயணக்கதை மிகவும் சுவாரஸ்யமானது. அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு இன்னும் நூற்றைம்பது வருடங்கள் இருந்த அந்தக் காலத்தில், அவன் கதை உலகமெல்லாம் பரவியது. கையினால் எழுதிய பல பிரதிகள் உலவின. அவை பிரெஞ்சில் எழுதப்பட்டு பின்னர் லத்தீன், இத்தாலியன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைச் சொல்லின. புனைவுக் கட்டுரை என்ற இலக்கிய ரகத்தைக் கண்டு பிடித்தது,
‘In Cold Blood’ நாவலை எழுதிய ட்ரூமன் கபோரே என்று சொல்வார்கள். ஆனால், அந்த இலக்கிய ரகத்தை முதலில் கண்டுபிடித்தது மார்க்கோபோலோதான். எழுநூறு வருடங்களுக்கு முன்னர் வெளியான அவனுடைய பயணக் கட்டுரையில் புனைவு கலந்திருக்கும்; என்ன கொஞ்சம் அதிகமாகவே கலந்திருந்தது. ஒரு பயணக்காரனாக இருந்ததிலும் பார்க்க, மேலான இலக்கியக்காரனாகவே அவன் இருந்தான். உலகம் முழுவதும் அவனுடைய நூல்களைப் போட்டி போட்டுக்கொண்டு படித்தது. அதுதான் பதிமூன்றாம் நூற்றாண்டில் அதிகம் விற்பனையான புத்தகம். இந்த மேலான இலக்கியக்காரன் இறக்கும்போது சொன்ன வாசகம் இன்றுவரை எல்லோரையும் போட்டுக் குழப்பிக்கொண்டே இருக்கிறது.

###

பெரும் இலக்கியக்காரர்கள் பலர் மரணத்தின் வாயிலில் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஜேம்ஸ் ஜோய்ஸ் இறக்கும் முன்னர், ‘‘நான் எழுதியது ஒருவருக்குமே புரியவில்லையா?’’ என்று ஆற்றாது புலம்பினார். பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப், தன் சட்டைப் பைகளில் கற்களை நிறைத்துக்கொண்டு, தண்ணீருக்குள் இறங்கி தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்னர் அவர் இப்படி எழுதிவைத்தார்: 'என்னுடைய மூளை குழம்பிப்போய் இருப்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. அந்த நரகத்தை இன்னொருமுறை என்னால் அனுபவிக்க முடியாது. இம்முறை மீட்சியில்லை. எனக்கு சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.'

வேறு சில எழுத்தாளர்கள், மரணத்திற்கு முன்னர் குழப்பமடைவதற்குப் பதிலாக வெளிச்சத்தைக் கண்டிருக்கிறார்கள். ஓஹென்றி, ‘‘விளக்கை ஏற்றுங்கள். இருட்டிலே வீட்டுக்குப்போக எனக்குப் பிரியமில்லை’’ என்றார். விக்டர் ஹ்யூகோ, ‘‘எனக்கு கறுப்பு வெளிச்சம் தெரிகிறது’’ என்றார். தாகூர், ‘‘மரணம் என்றால் வெளிச்சத்தை மறைப்பது அல்ல; விளக்கை அணைப்பது. ஏனென்றால், வைகறை வாசலில் வந்துவிட்டது’’ என்றார்.

மரணம் நெருங்கிய போதும் நகைச்சுவையை விடாத மனிதர் மார்க் ட்வெய்ன்தான். அவர் இறக்கும் சமயம் பிரபலம் பெற்றுவிட்டார். அமெரிக்காவின் நிருபர்களுக்கு இடையில் போட்டி, யார் முதலில் அவருடைய மரணச் செய்தியை வெளியிடுவது என்று. ஒரு பத்திரிகை அவர் இறக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்தது. இதை அறிந்ததும் மார்க் ட்வெய்ன் ஓர் அறிக்கை விட்டார்: 'நான் இறந்துபோன செய்தி மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.'

மரணத்தின் வாயிலில் இலக்கியக்காரர்களாக மாறியவர்களும் உண்டு. சேர் ஃபிரான்சிஸ் பேக்கன் என்பவர், பதினாறாம் நூற்றாண்டில் முதலாம் ஜேம்ஸ் மன்னரிடம் விஞ்ஞானியாக, தத்துவவாதியாக, சட்ட நிபுணராக உயர்ந்த பதவிகள் வகித்தவர். ஒரு நாள் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டு, லண்டன் டவரில் அடைக்கப்பட்டார். அப்பொழுது தன்மீது கருணை காட்டும்படி மாட்சிமை பொருந்திய மன்னருக்கு, ஃபிரான்சிஸ் பேக்கன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார். டவரில் அடைக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான தண்டனை சிரச்சேதம்தான். சிரச்சேதம் செய்யப்பட்டால், அவருடைய தலையை வயிற்றின்மேல் வைத்து வெளியே அனுப்புவார்கள். சிலரை மன்னர் மன்னிப்பதும் உண்டு. இன்னும் சிலர் வாழ்நாள் முழுவதும் சிறையில் கிடந்து வாடவேண்டியதுதான். பேக்கன் விசயத்தில், அவர் கடைசி நிமிடத்தில் மன்னிக்கப்பட்டு, கழுத்தின்மேல் தலை நிற்க வெளியே வந்தார். அரச பதவிகள் எல்லாம் துறந்து, ஐந்து வருடங்கள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து, இறந்துபோனார். இந்தக் காலத்தில் அவர் அழியாத தத்துவங்களைப் படைத்தார். இவர் புகழ்பெற்ற இலக்கியவாதியும்கூட. ஷேக்ஸ்பியருடைய நாடகங்களை இவர்தான் எழுதினார் என்று சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

டோஸ்டோவ்ஸ்கி உலகத்தின் தலைசிறந்த படைப்பாளியாக மதிக்கப்படும் ரஷ்ய எழுத்தாளர். அவர் இளைஞராக இருந்த சமயம் பிரெஞ்சு எழுத்தாளர்களை விரும்பிப் படிப்பார். அவருக்கு இருபத்தெட்டு வயதாகும்போது, அவரும் இன்னும் சில நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். ராசத்துரோகக் குற்றம் சாட்டி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்கள். அவருடைய மரணத்துக்கு ஒரு நிமிடம் முன்பு தண்டனையை மாற்றினார்கள். அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு தன் சகோதரருக்கு டோஸ்டோவ்ஸ்கி கடிதம் எழுதினார். 'தண்டனையை நிறைவேற்றுவதற்காக எங்களை செமினோவ் மைதானத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே எங்களுக்கு வழங்கப் போகும் தண்டனை வாசித்துக் காட்டப்பட்டது. சிலுவையை முத்தமிடச் சொன்னார்கள். வாள்களை உருவி எங்கள் தலைகளுக்கு மேல் முறித்துப்போட்டார்கள். கொல்லுவதற்கு வசதியாக மூன்றுபேரைச் சேர்த்து ஒரு தூணில் கட்டினார்கள். நான் ஆறாவது ஆள். மூன்று மூன்று பேராக அழைத்தார்கள். இரண்டாவது குழுவில் நான் இருந்தேன். இறப்பதற்கு சரியாக ஒரு நிமிடம் இருந்தது. நான் உன்னை நினைத்தேன். சகோதரனே, கடைசி நிமிடத்தில் உன்னை மாத்திரமே நினைத்தேன். என் பக்கத்தில் நின்ற இரண்டு நண்பர்களிடமும் இறுதியாகத் தழுவி விடைபெற்றுக்கொண்டேன். அப்பொழுது ஊதுகுழல் ஒலித்தது. மாட்சிமை பொருந்திய மன்னர் எங்கள் மரண தண்டனையைக் குறைத்து நாலு வருடக் கடும்தண்டனையாக மாற்றியதை எங்களுக்குச் சொன்னார்கள்.' அன்று டோஸ்டோவ்ஸ்கி மரணத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் தப்பியிருக்காவிட்டால், அவருடைய படைப்புகளை எல்லாம் இழந்திருப்போம். ‘குற்றமும் தண்டனையும்,’ ‘கரமசோவ் சகோதரர்கள்,’ ‘முட்டாள்’ போன்ற நாவல்கள் எங்களுக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.

வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்காகவே வாழ்ந்து, மரணம் வந்தபோது, இலக்கியத்தைத் துறந்தவர்களும் உண்டு. ஒக்டேவியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்த பெரிய கவி வேர்ஜில். இவரும் ஒக்டேவியசும் இளவயதில் ஒன்றாகப் படித்தவர்கள்; நண்பர்கள். ஒக்டேவியஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வேர்ஜில், லத்தீன் மொழியில் ஒரு பெரிய காவியம் படைத்தார். அதற்கு ‘ஏனிட்’ என்று பெயர். திரோஜன் ஒருவன் இத்தாலிக்குப் பயணம் செய்து, ரோம் நகரை வெல்வதைச் சொல்லும் கதை. பதினொரு வருடங்கள் தொடர்ந்து எழுதியவர், அதை முறைப்படி வெளியிடும் முன்னர் இறந்துபோனார். மரணத்துக்கு முன் தன் நண்பர்களிடம், தான் எழுதிய காவியத்தை அழித்துவிடச் சொல்கிறார். அவருக்கு காவியத்தில் போதிய திருப்தி இல்லை. ஆனால், நண்பர்கள் சிறுதிருத்தங்கள் செய்து காவியத்தை வெளியிடுகிறார்கள். இன்றுவரை லத்தீனில் இது புகழ்பெற்ற காவியமாக விளங்கி வருகிறது. மரணம் சமீபித்தபோது, அவர் விட்ட வேண்டுகோளை நண்பர்கள் நிராகரித்ததால் மானுட சமுதாயத்துக்குப் பெரும் காவியம் ஒன்று கிடைத்தது.

###

உலகத்தின் முதல் ‘best seller’ நூலை எழுதியவன் மார்க்கோபோலோ. அவனுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தபோது, அவனுடைய தகப்பனும் சகோதரனும் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வெனிஸ் தேசத்து வர்த்தகர்கள். அந்தக் காலத்தில், நினைத்துக்கூட பார்க்க முடியாத தூரத்திலிருந்த சீனாவுக்குப் புறப்பட்டார்கள். பயணத்தை முடித்து, அவர்கள் மீண்டும் வெனிசுக்குத் திரும்பி வந்து சேர்ந்தபோது, மார்க்கோவுக்கு வயது பதினைந்து. ஒன்பது வருடங்கள் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் மார்கோவைப் பெற்ற தாயாரும் இறந்துபோகிறாள்.

இரண்டு வருடம் கழித்து, மறுபடியும் பயணம் புறப்பட்டபோது, பதினேழு வயதான மார்க்கோவும் சேர்ந்துகொள்கிறான். அவன் இளம் வாலிபனாய் இருந்தபோதிலும், பொறுப்புடனும் கருத்துடனும் தன்னைச் சுற்றி தினமும் மாறும் உலகை அவதானித்தபடி பயணம் செய்கிறான். முதல் உலகப் பயணி மார்க்கோபோலோ அல்ல. அவனுக்கு முன்பும் பலர் பயணம் செய்திருக்கிறார்கள் ஆனால் மார்க்கோபோலோவை இன்றும் நினைவில் வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது. அவன் தனது பயணத்தை இலக்கியமாக்கியது.

நாலு வருடங்கள் பயணம் செய்து சீனாவின் பெய்ஜிங் நகரை அடைகிறார்கள். அங்கே, மங்கோலிய சக்கரவர்த்தி குப்ளாய்கான் அரசு செலுத்துகிறார். பதினேழு வருடங்கள், பல அலுவல்களில், அரசனுக்கு ஆலோசனையாளராக மார்க்கோ பணிபுரிகிறான். 'பிரமாண்டமான பளிங்கு மாளிகை, அவற்றில் தங்கமுலாம் பூசிய அறைகள், கண்ணைப் பறிக்கும் வர்ணங்களில் தீட்டப்பட்ட மனித உருவங்களும் மிருகங்களும் உங்கள் மூச்சை நிறுத்தி, பரவசத்தையும் அதே சமயத்தில் வியப்பையும் தரும்.' இப்படி வர்ணிக்கிறான் மார்க்கோபோலோ. அங்கு நடக்கும் விருந்துகளும் அவனுக்கு ஆச்சரியத்தை விளைவிக்கின்றன. ஆறாயிரம் விருந்தினர்கள் ஒரே சமயத்தில் உணவருந்தும் மண்டபம். பத்தாயிரம் வல்லூறு வேட்டைக்காரர்கள், இருபதாயிரம் நாய்க் காவலர்கள் அரச ஊழியத்தில் இருக்கிறார்கள். இவனுடைய வர்ணனையில் மயங்கிய ஆங்கிலக் கவி சாமுவெல் டெய்லர் கோலரிட்ச், பின்னாளில் குப்பளாய்கான் பற்றி கவிதை புனைவார்.

மார்க்கோவின் வர்ணனைகள் நேரில் நின்று பார்ப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். அற்பமான சம்பவம்கூட அவன் எழுத்தில் இலக்கியமாக மாறிவிடும். கொடிய பாலைவனத்தைக் கடப்பதைப் பற்றி அவன் இப்படி எழுதுகிறான் : 'சில நேரங்களில் பயணிகள் பாலைவனத்தைக் கடக்கும்போது, கொள்ளைக்காரர்கள் அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டு, எதிர்த்திசையில் சிதறி ஓடி வழி தவறுவதுண்டு. பகல் நேரத்தில்கூட அமானுட ஓசைகளும் போர் ஒலிகளும் மேளச் சத்தங்களும் கிளம்பி பயணிகளைக் கிலி பிடிக்கவைக்கும். இந்தக் காரணங்களுக்காக பயணிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவே பயணிப்பர். இரவு தூங்கும் முன்னர், அடுத்த நாள் காலை பயணப்படவேண்டிய திசையை நோக்கி, திசைகாட்டியை நட்டு வைப்பர். மிருகங்களின் கழுத்துகளில் மணிகளை, கட்டிவைக்கவும் தவறமாட்டார்கள். இந்த முறையில் வழி தவறாமலும் மிருகங்கள் தொலையாமலும் பாதுகாத்துக் கொள்வார்கள்.'

தாய் நாட்டுக்கு மார்க்கோபோலோ திரும்பியதற்கு முக்கிய காரணம் குப்ளாய்கான் முதுமையடைந்துவிட்டதுதான். எந்த நேரமும் அவர் இறக்கலாம். அவர் இறக்கும்முன்னர், தான் ஈட்டிய திரவியம் முழுவதையும் தன் பிறந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லத் தீர்மானித்தான் மார்க்கோபோலோ. திரோஜன் போரை முடித்துவிட்டு ஒடிசியஸ் பத்து வருடங்கள் அலைந்ததுபோல, மார்கோவும் பத்து வருடங்கள் பயணம் செய்தான். அவன் திரும்பவும் வெனிசுக்கு வந்து சேர்ந்தபோது, அவனுக்கு வயது நாற்பத்தியிரண்டு. ஆனால், அவனால் அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்துடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. வெனிசுக்கும் ஜெனோவாவுக்கும் இடையில் போர் மூண்டது. போரிலே மார்க்கோபோலோவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். சிறையிலே கைதிகளுக்கு மார்க்கோபோலோ, தன் இருபத்தைந்து வருடப் பயணக் கதைகளை வெறும் ஞாபகத்தில் இருந்து சொல்ல, அவனுடன் இருந்த சக கைதி ஒருத்தன், எழுத்தாளன், பெயர் ரஸ்டிசெல்லோ, அதை பிரெஞ்சு மொழியில் எழுதினான்.

ஹெரோடோரஸ் போல, மார்க்கோ வரலாறு படைப்பதற்காகப் புறப்பட்டவன் அல்ல. வழி நெடுக குறிப்புகளும் எழுதி வைக்கவில்லை. சிறையில் நேரத்தைப் போக்குவதற்காக தன் அனுபவங்களை எழுதினான். பதினேழு வயதிற்குள் பல இலக்கியங்களை ஆழமாகக் கற்றிருந்தபடியால் அவன் எழுதியதில் கலைநேர்த்தி இருந்தது. அமோகமான ஞாபகசக்தியும் நுண்ணிய அவதானிப்புமே அவனை இலக்கியக்காரனாக மாற்றியது.

மேற்கு கிழக்காகப் பல பயணங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், வடக்கு தெற்காகப் பிரயாணம் செய்த முதல் பயணி மார்க்கோதான். சீனாவில் தான் கண்ட புதுமைகள் அனைத்தையும் மார்க்கோ வர்ணித்தபோது, அந்தக் காலத்து சரித்திர ஆசிரியர்கள் அதைப் புளுகு மூட்டை என்று தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அவன் எழுதிய விபரங்கள் பின் வந்த வரலாற்றுக்காரர்களுக்கு உதவியாக அமைந்தன. இன்றும் சிலர் இவன் எழுதிவைத்ததை நிராகரிக்கிறார்கள். ‘மார்க்கோ, அரைவாசி சரித்திரக்காரன், அரைவாசி கற்பனைக்காரன்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஓர் இடத்தில் மார்க்கோ எழுதுகிறான்: 'ஒரு ராட்சதப் பறவை, யானையைத் தன் கால்களில் இடுக்கிக்கொண்டு பறக்கும். நல்ல உயரத்துக்கு எழும்பியதும் தொப்பென்று யானையைக் கீழே போட்டு, அதன் எலும்புகளை உடைக்கும். அதன் பிறகு இறைச்சியைக் கொத்தி சாப்பிடும்.' இப்படி புளுகுகளைச் சேர்த்ததால் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. இன்னும் சில வரலாற்று ஆசிரியர்கள், ‘இவன் சீனாவுக்குப் போனதே கிடையாது; தன் பயணங்களில் கேள்விப்பட்டதையும் கற்பனையையும் கலந்து கதை விட்டிருக்கிறான்’ என்று கூறுகிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. சீனாவின் புகழ் பெற்ற தேநீரைப் பற்றியோ, அவர்கள் குச்சிகளினால் சாப்பிடுவது பற்றியோ ஒரு வார்த்தை அவன் எழுதவில்லை; நீண்ட நெடுஞ்சுவரைப் பற்றி சொல்லவில்லை; சீனப் பெண்கள் கால்களை துணியினால் சுற்றி இறுக்கக்கட்டி சிறுக்க வைப்பது பற்றியும் அவன் கூறவில்லை.

உண்மைச் சரித்திரத்தை எழுதுபவர்கள், அதில் சிறு பொய் சேர்த்தாலும் உண்மையின் மதிப்பு போய்விடுகிறது. மார்க்கோபோலோ, அருமையான பயணச் சித்திரங்களை இலக்கியமாக்கியபோது, அவற்றின் சுவையை மேலும் அதிகமாக்க சிறிது புனைவைக் கலந்திருக்கிறான். அவன் பெரும் பொய்யனோ அல்லது சரித்திரக்காரனோ தெரியாது. ஆனால், அவன் பெரும் பயணி. அதனிலும் சிறந்த இலக்கியக்காரன்.

அவன் இறக்கும்போது அவனுக்கு வயது எழுபது. அந்தக் கடைசி நிமிடங்களிலும் அவன் இலக்கியக்காரனாகவே வாழ்ந்தான். ‘'நான் பார்த்ததில் பாதியைத்தான் கூறினேன்; மீதியைச் சொல்லவே இல்லை’' என்று மர்மமாகச் சொல்லிவிட்டு இறந்து போனான். அவன் சொல்லாமல் விட்ட பாதி, சரித்திர மூட்டைகளா, புளுகு மூட்டைகளா?

அவனுக்கு மட்டுமே தெரியும்.

quelle - kumutham theeranathi march2006

Sunday, March 19, 2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 3

கண்டுபிடித்தவர்களின் கதை
_ உதயபிரபா _

ரப்பர் மனிதன்!

'ரப்பர்' என்கிற பொருள் இல்லாமல் இன்றைக்கு உலகில் எதுவும் இயங்காது. அந்த அளவுக்கு ரப்பரின் பயன்பாடு இருக்கிறது. வாகனங்களின் பிரேக்குகள், டயர்கள், முக்கிய இயந்திர பாகங்கள் என்று ரப்பரின் பயன்பாடு ஏராளம். ஆனால் ஆரம்பத்தில் ரப்பர் மரத்திலிருந்து வடியும் பிசினாகத்தான் இருந்தது. கொஞ்சம் வெப்பம் அதிகரித்தால் அதனால் செய்யப்படும் பொருட்கள் உருகி ஓடிவிடும். அதனால் இதை யாரும் பயன்படுத்த முடியவில்லை. அப்போது தான் சார்லஸ் குட்இயர் என்பவர் இதைப் பார்த்தார். வெப்பத்தைத் தாங்குமளவுக்கு ரப்பரை உருவாக்க எண்ணினார். தன் வாழ்நாள் முழுவதையுமே அதற்காகக் கொடுத்தார். ஆனால் அமெரிக்காவே அவரை எள்ளி நகையாடியது. 'பைத்தியக்காரன்' என்று ஏசியது. அவர் கடன்களுக்காக அவரை சுமார் பத்துமுறைக்கும் மேல் சிறைக்கம்பிகளின் பின்னே தள்ளியது. ரப்பரை வெப்பத்தைத் தாங்குமளவுக்கு உறுதியான பொருளாக ஆக்கலாம் என்று கண்டுபிடித்த பிறகும் குட்இயர் வறுமையில் தான் வாடினார். அவர் இறக்கும் போது அவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துவிட்டுத்தான் இறந்து போனார். இந்த மனிதருக்கு நேர்ந்த கொடுமை எந்த கண்டுபிடிப்பாளனுக்கும் நேரக்கூடாது!

பிறவி விஞ்ஞானி!

சார்லஸ் குட்இயரின் அப்பா அமாஸ் குட்இயரும் ஒரு கண்டுபிடிப்பாளர்தான். அமெரிக்காவில் கனெக்டிகெட்டில் வசித்துவந்த அவர் அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் அனைத்தையுமே ஏதோ ஒரு வழியில் மேலும் பயனுள்ளதாக ஆக்க முயன்றார். பிரிட்டிஷ் படைகளுடன் அமெரிக்க படைகள் மோதியபோது, அந்த ராணுவத்தினர் அணிந்திருந்த சீருடையின் பட்டன்கள் அமாஸ் கண்டுபிடித்தவை.
அவரது மகனான சார்லஸீக்கு ஆரம்பத்தில் இதில் நாட்டமில்லை. அப்பாவின் கண்டுபிடிப்புகளை விற்பதுதான் அவரது வேலை. அதையும் வேண்டாவெறுப்பாக செய்தார். அவருக்கு அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அமாஸ் தன் மகன் சார்லஸை அதற்கெல்லாம் அனுமதிக்கவில்லை. தன்னுடைய சிறிய ஆய்வகத்தில் வேலை செய்யும்படி பார்த்துக்கொண்டார்.

ஒருகட்டத்தில் குட்இயர்கள் இருவரும் ஒரு ஹார்டுவேர் கடையை ஆரம்பித்தார்கள். அந்த காலத்தில் ஹார்டுவேர் கடைகள் என்று தனியாக எதுவும் கிடையாது. அதுமாதிரி பொருட்களை விற்பவர்கள், அவற்றை முதுகில் சுமந்து சென்று வீடு, வீடாக அலைந்து விற்பார்கள். அதிலிருந்து வித்தியாசமாக இவர்கள் ஆரம்பித்த கடை நன்றாக 'பிக்_அப்' ஆனது. ஆனால் சார்லஸீக்கு பணத்தில் அவ்வளவாக கவனமில்லை. கேட்டபவர்களுக்கெல்லாம் கடனுக்கு பொருட்களை வாரிவழங்கினார். ஒருகட்டத்தில் அந்த பொருட்களுக்குப் பணத்தை வசூலிக்க முடியவில்லை. சார்லஸின் தாராளமனம் கடனாளிகளை வற்புறுத்தி வசூலிக்க இடம் கொடுக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் ஓர் ஏமாளி!
இதனால் கடையினால் ஏற்பட்ட நஷ்டம் பெரிய கடனாக உருவெடுத்தது. இந்த கடனுக்கு தானே பொறுப்பு என்று முன்வந்த சார்லஸீக்கு தண்டனை காத்திருந்தது. அந்த காலத்தில் கடனைத் திருப்பிக் கட்டவில்லையென்றால் சிறையில் போட்டுவிடுவார்கள். முப்பது வயதில் ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்த சார்லஸ் எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முறையாக 1830_ல் சிறைக்குப் போனார்.

வெளியே வந்த பிறகு பிற நகரங்களில் தொழில் தொடங்கி மேலும் கடனாளி ஆனார். இப்படி அடுத்தடுத்த நான்கு வருடங்களில் ஆறுமுறை ஜெயிலுக்குப் போய் திரும்பினார் அவர். வாழ்க்கையில் முன்னேற தொழில் செய்வது தனக்கு வெற்றிதராது என்று அவருக்குத் தெரிந்தது. ஏதாவது செய்தால்தான் குடும்பத்தினருக்கு சோறு போட முடியும். எதையாவது கண்டுபிடித்து அதை விற்றால் காசு கிடைக்கும். எதைக் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

முதன் முதலில் ரப்பரைப் பார்க்கிறார்!

1834_ல் ஒரு நாள். பாஸ்டன் நகரில் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த போது ஒரு கடையில் ரப்பரால் ஆன, காற்றடைத்தால் தண்ணீரில் மிதக்கும் ஆடைகளைப் பார்த்தார். உடனே விறுவிறுவென்று கடைக்குள் போய் விசாரித்தார். 'ரப்பர்' என்ற பொருளோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது அப்படித்தான். அந்த ரப்பர் ஆடைகளை இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக ஆக்கும் ஐடியா அவருக்கு வர, அதைச் சொல்லி, அந்த கடையின் உரிமையாளரை 'இம்ப்ரெஸ்' செய்த அவர் 'மேலும் ஐடியாக்களுடன் சில நாட்கள் கழித்து வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அந்த சில நாட்களில் நிலைமையே மாறிவிட்டது.


அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ் குழுவினர் ரப்பர் பந்துகளை வைத்து அங்குள்ள பழங்குடியினர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 'கேட்சௌக்' என்று அழைக்கப்பட்ட அந்தப் பொருள் அதன் பின்னர் சில காலம் கழித்து ஐரோப்பியர்களைக் கவர்ந்தது. அதை வைத்து பேப்பரில் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிக்கலாம் என்று கண்டுபிடித்து அதற்கு 'அழிப்பான்' என்று பொருள் வரும் 'ரப்பர்' என்ற பெயரை ஜோசப் ப்ரிஸ்ட்லி என்ற விஞ்ஞானி வைத்தார்.

பின்னர் இதை வைத்து 'வாட்டர் ஃப்ருப்' துணிகளைத் தயாரித்தார்கள். இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவிலும் இதுபோன்ற ரப்பர் துணிகள் தயாரிக்கப்பட்டன. அவை மார்க்கெட்டுக்கு வந்தவுடன் அவை குட்இயர் கண்ணில்பட்டன.

ஓ.கே.... குட்இயர் தன் ஐடியாக்களை உருவாக்கிய அந்த சில நாட்களில் அமெரிக்காவின் கோடைக்காலம் வந்தது. வெப்பம் அதிகரித்து, வெப்ப அலை வீசியது. இதை ரப்பர் துணிகளால் தாங்க முடியாமல் அவை உருகிவிட்டன. கோடவுன்களில் அவை உருகிஓட, இந்த துணிகளை வாங்கிப் போனவர்களோ திருப்பிக் கொண்டுவந்து கடையில் கொடுத்துவிட்டார்கள். ரப்பர் தொழில் ஆரம்பத்திலேயே 'படுத்து'க் கொண்டுவிட்டது!

ரப்பரை பல வழிகளில் பயன்படுத்த முடியும். ஆனால் அது வெப்பத்தை தாங்காது. அதிகப்படியான குளிரில் பாளம்பாளமாக உடைந்துபோகும் என்ற பிராக்டிகல் உண்மை குட்இயருக்குப் புரிந்தது. ஆனால், இந்த ரப்பரை வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதியுள்ளதாக ஆக்கலாம் என்று புதிய ஐடியா அவருக்குப் பளிச்சிட்டது! அந்த ஐடியா அவரை கிட்டத்தட்ட பைத்தியக் காரன் ஆக்கிவிட்டது. படாதபாடு படுத்தியது!

இந்த ஐடியாவோடு வீடு திரும்பிய அவரை எதிர்பார்த்து ஒரு கடனாளி காத்திருந்தான்! அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்டான்!

சிறைச்சாலையே ஆய்வுக் கூடம்!

இம்முறை சிறைக்குப் போன குட்இயர் கொஞ்சம் வருத்தப்படவில்லை. சிறைச்சாலையில் தனக்குகிடைத்த நேரத்தை முறையாக செலவிட்டு தன் ரப்பர் ஆராய்ச்சியைத் தொடரவே விரும்பினார். ஜெயிலரிடம் தன் அறையையே சிறிய ஆய்வகமாக மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டார். அதிசயமாக ஜெயிலரும் அதை அனுமதிக்க, தன்னைப் பார்க்க வரும் மனைவியிடம், அவரால் முடிந்த அளவுக்கு ரப்பரும், வேதிப்பொருட்களும் கொண்டுவரும்படி கேட்டு, இரவு பகலாக தன் அறையிலே ஆராய்ச்சியைத் தொடர்ந்துவிட்டார். அந்த ஆராய்ச்சியில் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். மெக்னீஸியத்தைக் கலந்தால் ரப்பரின் ஒட்டும்தன்மை குறைந்துவிடுகிறது என்பது தான் அது.

சிறையிலிருந்து வெளியே வந்ததும், இதை வைத்து நிறைய பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்தார். ஓரளவுக்கு விற்பனை ஆகி, குடும்பம் மூன்று வேளை வயிறார சாப்பிட்டது. குட்இயர் தன் கண்டுபிடிப்புக்கான சில மெடல்களையும் வாங்கினார். இருந்தாலும் அவர் கண்டுபிடிக்க நினைத்த 'ரப்பர் ரகசியம்' அவரிடம் மாட்டவே இல்லை. அது எதிர்பார்க்காத ஒரு விதத்தில் கிடைத்தது. அது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்!

quelle - kumutham-march2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 2

கண்டுபிடித்தவர்களின் கதை
_ உதயபிரபா _

அச்சத்தை உருவாக்கிய 'அச்சு' மனிதர்!

1814. நவம்பர் மாதம் 29_ம் தேதி. காலையில் 'தி டைம்ஸ்' பத்திரிகையை வாங்கி பார்த்த லண்டன் வாசிகள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார்கள். பிரித்துப் பார்த்த போது அதில் இருந்த செய்தியன்று அச்சுத்தொழிலில் ஏற்பட்டிருக்கும் புதிய புரட்சியைப் பற்றிச் சொன்னது. "இதுவரை கையால்தான் எழுத்துக்களைக் கோர்த்து, அச்சுக்களை பேப்பரில் பதித்து அச்சிட்டு வந்தோம். இப்போது கிடைத்திருக்கும் புதிய இயந்திரம் மனிதர்கள் வேலையை தானே படுவேகத்தில் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் 1100 காப்பிகள் அடித்துத்தள்ளிவிடுகிறது. அப்படிப்பட்ட இயந்திரத்தை உலகிலேயே நாங்கள் தான் முதல் முதலில் பயன்படுத்தியுள்ளோம்" _என்றது அந்த செய்தி.

இந்த இயந்திரத்தை அரும்பாடுபட்டு கண்டுபிடித்தவர் பெயர் கோனிக். உலகில் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டிய சிரமங்கள் அனைத்தையும் அனுபவித்து நொந்து நூலானவர். ஐரோப்பாவில் பிறந்த கோனிக்கின் குடும்பம் வறுமையின் பிடியிலிருந்தது. அவரது அப்பாவால் கோனிக்கை பள்ளிப்படிப்பையே ஒழுங்காக படிக்கவைக்க முடியவில்லை. 13_வயதிலேயே தன் சாப்பாட்டுக்கு தானே உழைக்க வேண்டிய கட்டாயம் கோனிக்குக்கு வந்துவிட்டது. சிறுவனாக இருந்தபோதே அவர் ஒரு அச்சகத்தில் உதவியாளராக சேர்ந்தார். இதுதான் அவர் செய்த உருப்படியான காரியம்.

இந்த சிறுவன் மணிக்கணக்கில் ஆமை வேகத்தில் நடக்கும் அச்சக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சிடும் முறையை கண்டுபிடித்த கூட்டன்பர்க் காலத்திலிருந்து சுமார் 400 ஆண்டுகளாக அதே முறையைத்தான் கையாண்டு வந்தார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.

கோனிக் மனதில் அப்போது உருவாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நீராவி இயந்திரங்கள் அலை மோதின. இவற்றைப் பயன்படுத்தி அச்சிடும் முறையை வேகமாக்கலாமே என்று தோன்றியது. இந்த ஐடியா 'பளிச்'சிட்ட பிறகு கோனிக்கால் தூங்க முடியவில்லை. ஆனால் அதை செயல்படுத்தத்தான் எந்த வசதியுமில்லை. அப்படியரு இயந்திரத்தைக் கட்ட பணம் வேண்டுமே?

கோனிக் யார் யாரிடமோ போய் உதவி செய்யுமாறு கோரினார். அந்த இளைஞனைப் பார்த்து யாருக்கும் நம்பிக்கை வரவில்லை போலிருக்கிறது. விரட்டி விரட்டி அடித்தார்கள். அத்துடன் அங்கே காப்புரிமை வாங்குவதற்கும் அரும்பாடு பெற வேண்டும். ஒரு கண்டு பிடிப்புக்கு ஜெர்மனி முழுவதும் காப்புரிமை வாங்குவதென்றால் எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டும். வேலை செய்தால் தான் சாப்பாடு என்றிருக்கும் கோனிக் அதெற்கெல்லாம் எங்கே போவார்?

அதனால் திடீரென்று ஒரு நாள் கண்கள் நிறைய கனவோடும், தன் ஐடியா ஒன்றை மட்டுமே சொத்தாகக் கொண்டும் இங்கிலாந்துக்குக் கப்பலேறி விட்டார். அந்த நாட்டில் காப்புரிமைச் சட்டங்கள் உறுதியானவையாக இருந்ததும் ஒரு காரணம்.

வந்த இடத்தில் கையில் காசு இல்லாததால் ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்துகொண்டார். பென்ஸ்லி என்ற 'விவர.மான' ஆள் ஒருவர் இவரது ஐடியாவை செயல்படுத்திப் பார்க்க ஆர்வம் கொண்டார். மெஷினைக் கட்டுவதற்கு மெக்கானிக் வேண்டுமே? ஜெர்மனியிலிருந்து கோனிக்கைப் போல கையில் பைசா கூட இல்லாமல் வந்திருந்த பேயர் என்பவர் கிடைத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

கோனிக் இயந்திரத்தை பேப்பரில் டிசைன் செய்ய அதற்கு இயந்திரவடிவத்தை பேயர் கொடுத்தார். முதல் நவீன அச்சிடும் இயந்திரம் உருவானது. 20க்கு 32 இஞ்ச் சைஸ் உள்ள நாலுபக்கம் அடங்கிய தாளில் இந்த மெஷின் ஒரு மணி நேரத்துக்கு 1,100 காப்பிகள் பிரிண்ட் செய்து கொடுத்தது. அதாவது இது அப்போது கையால் செய்யப்பட்ட வேலையின் வேகத்தைவிட நான்கு மடங்கு அதிகம்! மெஷின் மிக அற்புதமாக வேலை செய்தது. ஆனால் இதை யாருக்காவது விற்கவேண்டுமே... இவர்களுக்கு உதவியாக இருந்த பென்ஸ்லி நேராகப் போய் லண்டனின் பெரிய பத்திரிகையான 'தி டைம்ஸின்' உரிமையாளர் ஜான் வால்டரை சந்தித்தார்.

ஆரம்பத்தில் அப்படியரு மெஷின் இருக்குமா என்று தயங்கிய வால்டர் நேரில் வந்து பார்த்துவிட்டு அசந்து போனார். வாவ்... என்ன வேகம்!

"எனக்கு நான்கு மெஷின்கள் செய்து கொடுங்கள்!" என்று அந்த இடத்திலேயே காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு திரும்பினார் வால்டர்.

இதைச் செய்துமுடித்து வால்டருக்கு டெலிவரி கொடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இயந்திரங்களைப் பற்றி அதற்குள் தெரிந்து கொண்டிருந்த டைம்ஸின் அச்சக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இந்த மெஷின்களை அச்சகத்தில் நுழையும் வழியை மறித்தார்கள். அதைக் கொண்டுவரவே முடியவில்லை. வால்டர் ஓர் ஐடியா செய்தார். ஒரு ரகசியமான இடத்தில் அந்த மெஷின்களை நிறுவினார்.

ஒரு நாள் காலையில் பேப்பரை அச்சடிப்பதற்காக காத்திருந்த தன் அச்சக ஊழியர்களுக்கு "சற்று நேரம் காத்திருங்கள். ஒரு முக்கியமான செய்திக்காக காத்திருக்கிறோம்!" என்று தகவல் அனுப்பினார். அதை நம்பி அவர்கள் காத்திருக்க, இங்கே ரகசியமாய் இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தன. அச்சிடப்பட்ட 'டைம்ஸ்' காப்பிகளை எடுத்துக் கொண்டுபோய் அந்த ஊழியர்களை சந்தித்தார் வால்டர். அவர்களிடம் அவற்றை நீட்ட... அதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் அச்சக ஊழியர்கள்.

"நீங்கள் எல்லோரும் வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளுங்கள். அதுவரை நான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறேன்!" என்று உறுதி மொழி கொடுத்து அச்சக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் வால்டர். கசப்போடு வீட்டுக்குப் போனார்கள் அவர்கள்.

இந்த இயந்திரம் தான் அச்சு உலகில் பெரும் புரட்சியை உருவாக்கி உலகெங்கும் உள்ள பத்திரிகைகள் இதே தொழில்நுட்பத்தை தழுவ வைத்தது. பிரதிகளின் எண்ணிக்கை கூடி, பத்திரிகை விலையும் குறைந்தது. சரி... நமது கண்டுபிடிப்பாளர் கோனிக்கும், பேயரும் என்ன ஆனார் என்று பார்க்க வேண்டாமா?

இவர்களுக்கு கிடைத்த பணத்தில் பெரும்பங்கு பென்ஸிலிக்குப் போய்விட்டது. அதுபோக மீதிப்பணம் கடன்களுக்கே சரியாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கையுடன் பிறகு ஜெர்மனிக்கே திரும்பிய இவர்கள் அங்கே ஒரு பள்ளியை தொழிற்சாலை ஆக்கி, இந்த இயந்திரங்களை உருவாக்கும் வேலையை ஆரம்பித்தார்கள். ஆனால் தரமான மெக்கானிக்குகள் கிடைக்கவில்லை. அதனால் புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து பயிற்சி அளித்தார்கள். இதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன. கடைசியில் 1822_ம் ஆண்டிலிருந்து இயந்திரங்கள் உருவாகி சப்ளை ஆரம்பித்தது. உலகெங்கும் தன் இயந்திரங்கள் பயன்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதை பார்த்து விட்டு தன் அறுபதாம் வயதில் இறந்தார் கோனிக்.

கோனிக் ஆரம்பித்த தொழிற்சாலை ஜெர்மனியில் இன்னமும் இருக்கிறது!

quelle - Kumutham-march2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 1

கண்டுபிடித்தவர்களின் கதை _ உதயபிரபா _

நடுக்கடலில் காணாமல் போனவர்!

அந்த படகு பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்து நோக்கிக் சென்று கொண்டிருந்தது. அதில் ஓர் உலகப் புகழ்பெற்ற மனிதர் இருந்தனாலோ, என்னவோ, அந்த பெரிய படகும் கர்வத்தோடே சென்றுகொண்டிருந்தது. அந்த மனிதர் ருடால்ஃப் டீசல். அவருடைய நண்பர்கள் சிலரும், வியாபார கூட்டாளிகள் சிலரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இரவு பத்து மணி ஆகும் வரை அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் டீசல். பிறகு 'நாளை காலையில் பார்ப்போம்!' என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார். அனைவரும் கைக்குலுக்கி விட்டு தங்கள் அறைகளுக்குச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் ருடால்ஃப் டீசலைக் காணவில்லை. அவர் கைகடிகாரம், சூட்கேஸ் ஆகியவை மட்டும் அறையில் இருந்தன. நடுக்கடலில் டீசல் காணாமல் போய்விட்டார்.

பிரான்சில் வசித்த ஜெர்மானிய பெற்றோருக்குப் பிறந்த ருடால்ஃப் டீசல் 12 வயதான போது குடும்பத்துடன் லண்டனுக்கு வந்துவிட்டார். அங்கே சில நாட்கள் இருந்த பிறகு பவேரியாவுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. அங்கே தான் பள்ளிப்படிப்பு.

1878_-ஆம் ஆண்டில் ஒரு நாள் நீராவி எஞ்சின் பற்றி அவரது ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். "எரிபொருள் எரிக்கப்படும் போது உருவாகும் வெப்பத்தில் ஆறிலிருந்து ஏழு சதவீதம் மட்டுமே ஆற்றலாக மாறுகிறது" என்று நீராவி எஞ்சின் பற்றி குறைப்பட்டுக் கொண்டார் அவர். அது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டு இயற்பியல் அறிஞர் கார்னாட் (நீணீக்ஷீஸீஷீt) என்பவர் சொன்ன எல்லா வெப்பமும் ஆற்றலாக மாறுதல் அடையும் என்ஜின் பற்றிய தியரியையும் விளக்கினார். கேட்டுக்கொண்டிருந்த ருடால்ஃப் தன் நோட்டின் ஒரு ஓரத்தில் "இந்த எஞ்சினை நான் கண்டு பிடிப்பேன்!" என்று எழுதி வைத்துக் கொண்டான்.

ஆனால் அதை உருவாக்க அவர் பதினைந்து ஆண்டுகள் போராட வேண்டிருந்தது. உண்மையில் விஷயம் மிகவும் ஸிம்பிளானது. எஞ்சினின் சிலிண்டரில் வெப்பநிலையை ஒரே சீராக வைத்தால் உருவாகும் வெப்பம் அனைத்தும் ஆற்றலாக மாறிவிடும். ஆனால் அதைச் செய்வது எப்படி?

"படிப்பை விட்டுவிட்டு பிழைப்புக்காக வேலைகள் செய்ய வந்துவிட்டேன். ஆனால் இந்த எஞ்சின் பற்றிய ஐடியா என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது" என்று நினைவு கூர்கிறார் டீசல்.

இதுபற்றி ஆராய்ச்சி செய்து மூளையை உடைத்து ஒரு சிறிய புத்தகத்தை வெளியிட்டார் டீசல். அதில் இந்த எஞ்சின் செய்வது பற்றிச் சொன்ன அவர்... அதற்கான காப்புரிமையை முதல் ஆளாக வாங்கிக் பத்திரப்படுத்திக் கொண்டார். அந்த அளவுக்கு புத்திசாலியாக இருந்தார் அவர். இந்த புத்தகம் வெளிவந்த உடனே எந்திரங்களின் உலகம் அவரை ஒரே நாளில் அறிந்துகொண்டது. பெரிய பெரிய கம்பெனிகள் இவரது ஐடியாவை பரிசோதிக்க முன்வந்தன. நான்கு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு முதல் டீசல் என்சின் உருவாகிவிட்டது.

எரிபொருள் எரிக்கப்படும் போது உருவாகும் எல்லா வெப்பத்தையும் ஆற்றலாக மாற்ற வேண்டும் என்ற கார்னாட்தியரியை டீசலால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய எஞ்சின் அப்போது உபயோகத்தில் இருந்த பெட்ரோல் எஞ்சின்களை விட, அதிகப்படியான ஆற்றலைக் கொண்டதாக இருந்தது.

இந்த எஞ்சினின் சிலிண்டரில் அடைபடும் காற்று, எரிபொருளாகப் பயன்படும் எண்ணெயை எரிக்கும் அளவுக்கு அழுத்தத்தின் மூலம் சூடாக்கப்படுகிறது. அதாவது... பிஸ்டன் காற்றை அழுத்துவதன் மூலம் அதன் வெப்பத்தை உயர்த்துகிறது. வெப்பம் உயர்ந்த பிறகு எண்ணெய் சிலிண்டருக்குள் வழிய விடப்படுகிறது. உடனே 'குப்'பென்று பற்றிக் கொண்டு வெடிக்கிறது பிஸ்டன் வேகமான இயக்கப்படுகிறது. இதுதான் டீசல் கண்டுபிடித்த எஞ்சினின் தத்துவம்.

-இதில் பெட்ரோலை விட அடர்த்தியான அவ்வளவாக சுத்தம் செய்யப்படாத எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அட்வான்டேஜ். இந்த எண்ணெய் தான் இப்போது 'டீசல்' என்று அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த எஞ்சினுக்கும் டீசல் எஞ்சின் என்றே பெயர் வந்து விட்டது.
இந்த எஞ்சினில் 35 சதவீத வெப்பம் ஆற்றலாக மாற்றப்பட்டது. பெட்ரோல் எஞ்சினில் இது 28 சதவீதம் மட்டுமே... நீராவி எஞ்சினிலோ வெறும் 12 சதவீதமாக இருந்தது. அப்புறமென்ன டீசலின் வெற்றிக்கு கேட்கவா வேண்டும்? இன்றைக்கும சாலைப் போக்குவரத்தில் டீசல் எஞ்சினை மிஞ்ச எதுவுமேயில்லை.

டீசலின் இந்த எஞ்சினை எந்திர உலகம் இருகைகளையும் அகல விரித்து வரவேற்றது. இருந்தாலும் அவருக்கு எதிரிகளும் இல்லாமல் இல்லை. ஹெர்பெர்ட் அக்ராய்ட்_ஸ்டுவர்ட் என்கிற ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர் டீசல் கண்டுபிடித்த இயந்திரம் போலவே ஒன்றை உருவாக்கியிருந்ததைச் சுட்டிக் காட்டி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் டீசலின் பெயர்தான் நிலைத்தது. பெயர் சுருக்கமான வாயில் நுழைகிற மாதிரி இருந்ததாலோ என்னவோ..?

டீசலின் இந்த வெற்றி அவரை வாழ்வின் உச்சகட்ட அந்தஸ்துக்குக் கொண்டுபோனது. பல நாடுகளில் வசித்திருந்ததால் உருவான பரந்துபட்ட அனுபவ அறிவு, பல மொழிகள் பேசும் திறன் ஆகியவையும் அவருக்குக் கைகொடுத்தன. ம்யூனிச் நகரில் அவர் ஆரம்பித்த கம்பெனிக்கு உலகம் முழுவதும் பல கிளைகள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் உலகம் அவரை மிகப் பெரிய அறிவுஜீவியாகக் கொண்டாடியது. அந்த நிலையில் தான் அவர் 1913_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று நடுக்கடலில் காணாமல் போனார்.

டீசல் காணாமல் போன மர்மம் பரபரப்பான செய்தியாக ஐரோப்பா முழுவதும் பேசப்பட்டது. படகிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்விக்கு... இவ்வளவு புகழின் உச்சியில், எல்லாவற்றையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என்றே பதில் வந்தது. அவரை யாரோ கொன்றிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டார்கள். அவர் படகிலிருந்து தவறி தண்ணீரில் விழுந்திருக்கலாம், அல்லது வேண்டுமென்றே தலைமறைவாகியிருக்கலாம் என்று பலப்பல யூகங்கள் ஆனாலும் மர்மம் சுத்தமாக விலகவில்லை.

அவர் காணாமல் போன நான்கு நாட்கள் கழித்து ம்யூனிச் நகரில் அவரைத் காணாத கவலையில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினருக்கு ஒரு தந்தி வந்தது. 'டீசல் லண்டனில் இருக்கிறார்' என்று அவர் கம்பெனி பெயரில் வந்தது அந்த தந்தி. அலறியடித்துக் கொண்டு லண்டன் முழுக்க சல்லடை போட்டுக் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அத்துடன் யார் தந்தியை அனுப்பியது என்றும் தெரியவில்லை.

இரண்டொரு நாள் கழித்து ஹாலந்து நாட்டுக் கடற்கரையில் ஒரு சடலம் கரையதுங்கியது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சடலத்தின் சட்டைப்பாக்கெட்டுகளைத் துழாவி அதிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சடலத்தை மீண்டும் கடலுக்குள்ளேயே போட்டுவிட்டார்கள். இந்த பொருட்கள் டீசலின் மகனுக்கு அனுப்பப்பட்டன. அவையெல்லாம் தன் தந்தையுடையவைதான் என்று அவர் உணர்ந்து கொண்டார். ஆனால் ஏன் தந்தை இப்படி இறந்தார் என்று அவருக்கும் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. அது புரிய மேலும் சில நாட்கள் ஆயின. டீசலின் வங்கி பேலன்ஸ் மற்றவர்கள் நினைத்திருந்த மாதிரியில்லை. அது அதலபாதளத்தில் இருந்தது. ஏகப்பட்ட கடன்கள்.. தவறான முதலீடுகள்.. கிட்டத்தட்ட கழுத்தை நெரித்து விழிபிதுங்கும் நிலையில் இருந்திருக்கிறார் டீசல்.

இது வெளியுலகுக்குத் தெரிந்து, அவமானம் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பியதால்தான் ருடால்ஃப் டீசல் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அவர் செய்தது தற்கொலையைதான் என்பதற்கு அவரது பாக்கெட் டைரியில் அவர் காணாமல் போனதினமான செப்டம்பர் 29_ல் சின்னதாய் பென்சிலால் போடப்பட்டிருந்த பெருக்கல் குறிதான் ஆதாரம்!.

quelle-kumutham

Tuesday, July 26, 2005

மறக்க முடியாத யூலைகள்

- வன்னியன் -

யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.

கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.

அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.


அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று அறைகூவல் விடுத்தார் ஜே.ஆர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரனையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.

1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினான். இது பற்றிய பதிவு இங்கே.

1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.

1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாள ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக் கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண் பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.

1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாள 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.

1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் பாரிய 5 இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.

1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது சம்பந்தமான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழந்ததால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.

இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர். பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.

அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.


இந்த யூலை வெற்றிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்த வெற்றி ஒன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படு கொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாள யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சொந்தமானவை மட்டுமே. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.


உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின் பின் உடனடியாய் எந்தவொரு படை நடவடிக்கையையும் செய்ய முடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்று வரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.

ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.

nantri-Poorayam

Monday, July 11, 2005

பண்டிதர் வீ.பரந்தாமனின் நூல் வெளியீடு

பண்டிதர் பரந்தாமனின் தூய தமிழ் சொற்களடங்கிய நூல் வெளியீடு

பண்டிதர் வீ.பரந்தாமனின் வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி எனும் தூய தமிழ் சொற்களடங்கிய நூல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கரையரங்கில் சனிக்கிழமை 9 .7.2005 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக தலைவர் கலாநிதி சி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ்மொழி இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் நூலினை பெற்றுக் கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசியக் கொடியினை பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஏற்றினார்.

நூல் வாழ்த்துரையை பொருளியல்துறைத் தலைவர் வித்தியானந்தன் வழங்கினார்.

நூல் வெளியீட்டுரையை விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆற்றினார்.

நூலின் முதல் பிரதியை இளம்பரிதி வெளியிட இளைப்பாறிய ஆசிரியை செல்வி. திலகவதி பெரியதம்பி ஏற்றுக் கொண்டார்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நூலின் அறிமுக உரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கினார்.

மதிப்பிட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

படங்கள்: யாழ். பாலன்

Friday, June 03, 2005

அளவைச் சுவடுகள்

- கழனி யூரன் -

இன்றைக்கு நமக்கு விஞ்ஞான பூர்வமான அளவுகள் கிடைத்துள்ளன. இந்த அளவுகள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அளவுகள் நடைமுறையில் இருந்தன. உதாரணமாக இன்றைய நமது நீட்டல் அளவு மீட்டர் என்பதாகும் பழந்தமிழகத்தில் தச்சுமுளம் எனற அளவு நடைமுறையில் இருந்தது. தச்சாசாரிகள் இந்த அளவையை அதிகமாகப் பயன்படுத்தியதால், தச்சுமுளம் என்று அந்த அளவுக்குப் பெயர் வந்தது.

‘இந்தத் தச்சு மளமும் கண்டுபிடிப்பதற்கு முன், பழந்தமிழர்கள் எந்த மாதிரியான அளவை வைத்திருந்தார்கள்...?’ என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன்.

அந்தப் பெரியவர் சொன்னார்; ‘‘அளக்க என்று அளவுகோல் தேடி, அந்தக் காலத்து மக்கள் எங்கும் போகவில்லை. அந்தக்காலத்தில் அளவு கோல்களை கையில் வைத்துக் கொண்டே அலைய முடியுமா என்ன? எனவே அவவனவன் உடம்பும், உடம்பின் உறுப்புகளுமே, அளவுகோல்களாகப் பயன்பட்டன’’ என்றார்.

‘‘அதெப்படி உடம்பை வைத்து அளக்க முடியும்?’’ என்று கேட்டேன்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘தம்பி அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீர்? இருக்கிறது என்று ஒருவர் கேட்டால், கிராமத்து மக்கள், அந்தக் கிணற்றில் கரண்டக்கால் அளவு தண்ணீர் கிடக்கு, அல்லது முட்டளவு தண்ணீர் கிடக்கு அல்லது இடுப்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது மார்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது கழுத்தளவு தண்ணீர் கிடக்கு அல்லது ஓராளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது அல்லது இரண்டாளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது என்று கூறிவார்கள்.. இப்படி கிணற்றில் கிடக்கிற தண்ணீரின் அளவை, நீர்நிலைகளில் கிடக்கிற தண்ணீரின் அளவைத் தன் உடம்பை வைத்தே அளந்தார்கள். பண்டை மக்கள். உயரத்தை அல்லது ஆழத்தை அளக்க, அளவுகோல் தேடி எங்கும் அலைய வில்லை. தன் உடம்பை வைத்தே, தனக்கான நீட்டல் அளவைக் கணித்துக் கொண்டான்.

நீட்டல் அளவை உடம்பில் அளந்தார்கள் என்பது சரி, உடல் உறுப்பால் அளந்தார்கள் என்று கூறினீர்களே.. அது எப்படி?’ என்று அந்தப் பெரியவரிடம் கேட்டேன்.

பெரியவர் சிரித்துக் கொண்டே ‘‘தம்பி....’’ என்று இழுத்தபடி மிக நுட்பமான நீட்டல் அளவை, அந்தக் காலத்து மக்கள் ஒரு ‘மயிர் கனம்’ என்று கூறுவார்கள். அதைவிட சற்று பெரிய அளவை ஒரு நூல்கனம் என்று சொல்வார்கள். கிராமத்தான் கட்டியிருந்த வேட்டியில் நூல் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நூலுக்கு அடுத்து ஒரு விரல் கடை என்று கூறுவார்கள். இந்த விரல் கடையிலும் சுண்டு விரல் தண்டிக்கு, பெருவிரல் தண்டிக்கு என்று இரண்டு விதமான அளவைச் சொல்வார்கள். ஒரு விரல் கடை, இரண்டு விரல்கடை, மூன்று விரல் கடை, பிறகு நான்கு விரல் கடை என்று நீட்டல் அளவைச் சொல்வார்கள். ஐந்துவிரல்கள் மனிதனுக்கு இருந்தாலும் ஐந்து விரல் கடைஅளவு என்று கூறுவதில்லை!

நான்கு விரல் கடைக்குப் பிறகு ஜாண்தான் பெரிய அளவு. ஒரு ஜாண் என்பது நான்கு விரல் கடையின் மூன்று பங்காகும். யார் கையாளாலும் இந்த அளவு அதாவது மூன்று, முறை வைக்கும் நான்கு விரல் கடை என்பது ஒரு ஜாண் என்ற அளவுக்குச் சரியாகத்தான் இருக்கும்.

ஜாணுக்கும் பிறகு முளம்தான் பெரிய அளவு. மூன்று ஜாண் சேர்ந்தால் ஒரு முளம். இரண்டு கைகளையும் நெட்டுக்கு நீட்டினால் ஒரு ‘கைப்பாகம்’ என்ற அளவாகும். மூன்று முளங்கள் சேர்ந்தால் ஒரு கைப்பாகம் ஆகும். இந்த நுட்பம் இயற்கையாகவே மனித உடலுக்கு வாய்த்துள்ளது. இதைக் கண்டறிந்து பழங்காலத்து மனிதர்கள் தன் அளவிற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடம்பில் உள்ள விரல்கள், கைகள் போன்றே காலாலும் பழங்காலத்தவர்கள் தங்கள் அளவுகளை, அளந்திருக்கிறார்கள்.

ஒரு ‘பாதம்’ இரு பாதம் என்று நீளங்களைத் தன் பாதம் கொண்டே அளந்துள்ளார்கள், பாதங்களுக்குப் பிறகு, ‘எட்டு’ என்று ஒரு அளவு உள்ளது. நிற்கிற நிலையில் வலதுகாலைத் திரையில் ஊன்றிக் கொண்டு இயல்பாக ஒரு எட்டு எடுத்து இடது காலை வைக்கும் தூரத்தைத் தான் ‘ஒரு எட்டு’’ என்ற அளவாகக் கூறுகின்றார்கள்.

இந்த எட்டையே முடிந்த வரை இரு காலையும் அகட்டி வைத்துக் கொண்டால் அதற்கு ‘ஒரு கவுடுதூக்கு’ என்று பெயர். மூன்று பாதம் ஒரு எட்டாகவும், மூன்று எட்டு ஒரு கவுடுதாக்காகவும் இருக்கும். இந்த அளவின் நுட்பத்தையும் உணர்ந்துதான் பழங்காலத்து மக்கள், காலின் மூலம், கால் பாதத்தின் மூலம் தங்கள் அளவுகளை அமைத்திருக்கிறார்கள்.

உடம்பையும் கையையும் சேர்த்து ‘‘ஒரு கை எடுப்பு உயரம்’’ என்றும் ஒரு அளவை சொல்கிறார்கள். பருமனைக் குறிக்கவும் அந்தக் காலத்தில் மனிதர்கள் தன் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மிக நுட்பமான பொருளைப் பற்றிப் பேசும்போது ‘‘கண்ணுக்குள்ள போட்டு எடுத்திரலாம்’’ என்று கண்ணை மையமாக வைத்துக் கூறினார்கள். அதைவிட சற்று பருமனான பொருளை ஒரு சிட்டிகை என்று கூறினார்கள். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து ஒட்டிப் பிடித்துக் கொண்டு எடுக்கும் ‘பொடி’ போன்றவைகளைச் சிட்டிகை என்று கூறினார்கள்.

உள்ளங்கையைக் குவித்து அதில் நெல்மணி போன்றவற்றை நிரப்பி, ஒரு கையளவு அல்லது ‘ஒரு சதங்கை’ என்றார்கள். இரண்டு கையையும் சேர்த்து நெல்மணிகளை அள்ளி ‘இருகை அளவு’ என்றார்கள். சோற்றை உள்ளங்கையில் வைத்து உருட்டி ஒரு ‘கவளம்’ என்றார்கள். ஒரு ‘வாய்ச் சோறு’ என்றும் ஒரு அளவைக் கூறினார்கள்.

இவைதவிர, சில பொருள்களின் அளவைப் பற்றிக் கூறும்போது, மணிக்கை தண்டி, கணுக்கால் தண்டி, தொடைத் தண்டி என்று பொருளின் பருமனுக்குத் தக்கபடி தன் உடல்உறுப்புகளைக் கொண்டு அளவுகளைக் குறித்தார்கள்.

மரத்தின் அளவுகளைக் கூறும்போது ஒரு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்கு, இரண்டு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்குப் பெரியது என்று கூறுகிறார்கள். இங்கும் கைகளே அளவு கோலாகப் பயன்படுகிறது, என்று அந்தப் பெரியவர் கூறினார்.

இப்படி ஆதிகாலத்தில் மனிதர்கள் தன் உடம்பையும், தன் உடம்பின் உறுப்புகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கொண்டு தனக்குத் தேவையான அளவுகளை அளந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.

இவைதவிர, கற்பனை நயத்துடன் சில அளவுகளை உடல் உறுப்புகளை மையமாகக் கொண்டு கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு மெகா ‘அளவுக்கு வாய் ரொம்ப நீளம்’ என்று கூறினார். அவள் அதிகமாகப் பேசுபவள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இங்கு ‘வாய்’ என்பது குறியீடாக நின்று பேச்சைக் குறிக்கிறது. அதேபோல், ஒருவன் அவனுக்கு ‘நாக்கு ரொம்ப நீளம்’ என்று கூறினால், ‘அவன் மிகவும் ருசியாகச் சாப்பிட ஆசைப்படுவான்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தத் தொடரில் நாக்கு என்ற சொல் ருசியைக் குறித்து வந்தது. இப்படி மனிதனின் உடலும் உடல் உறுப்புகளும் பழங்காலத்தில் அளவுகோல்களாகவும் பயன்பட்டுள்ளன.

- கழனி யூரன் -
nantri - Kumutham-yarlmanam

Saturday, May 14, 2005

ஜெயசிக்குறு(வெற்றி நிட்சயம்) 8ம் ஆண்டு

- வன்னியன் -

வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

இன்று மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக் கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாள இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமது மக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13.

1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம், ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.



ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப் படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்தில் இருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப் பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.



போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.



கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறிய போதுதான் பெண்புலிகளின் பெயர் பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப் பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.

பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.

சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.

இதற்கிடையில் மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்ற நடவடிக்கை மூலம் ஒட்டிசுட்டான் இராணுவத்தாற் கைப்பற்றப்பட்டது.

றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.

முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.

இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.

மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.

நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.


2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.

இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.

இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.

இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.

வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.

ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.

ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.

- வன்னியன் -
Quelle - http://pooraayam.blogspot.com/2005/05/blog-post_111598975121188173.html

Sunday, May 01, 2005

தொழிலாளர் தினம். (Labor Day )

ஆல்பர்ட்,
விஸ்கான்சின், அமெரிக்கா


உலகமெங்கும் "மே" மாதத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்... கனடாவில்... மட்டும் செப்டெம்பர் மாதத்தில்.... என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?! அவர்களுக்காக இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.....!

இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில் ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா", " என்னாச்சு... வீரப்பனோட லேட்டஸ்ட் நியூஸ் ஏதும் உண்டா " என்ற அலசல் நேரம் உட்பட) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த? பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப் படுத்தப்பட்ட ஒன்று.

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16 மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிற சலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.

அன்று...1863களில்...

அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச் சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசி நாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலை ஆரம்பமாகிவிடும்.

அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷுவுக்கு கொஞ்சம் பாலீஷ் போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..." என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷுபாலீஷ் வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ள நாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள் மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும்.

காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுகூட விடமுடியாது. ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டு அந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமான வயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதர சகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர் பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .

டிஸ்மிஸ்...

19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க் நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின் கனவு நொறுங்கித்தான் போனது.

ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில் நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர். இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்தது போல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வெளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடி தெருக்களில் வலம் வந்தனர்.

இவர்களுக்கு கிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்துவந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்று வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்கு ?இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.

தொழிற்சங்கம்...

பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்த மற்ற வேலைகளை விடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை குறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான். இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின் வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக் குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய் இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை.

தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலை முடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம் வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக் கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.

தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப் பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிற்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும் தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்க வேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக " பொது மக்களின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் " என்ற முத்திரை குத்தப்பட்டார்.

பீட்டர் பார்த்த வேலையும் சில விஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று படுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடு ஊர் ஊராக பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.

1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State ) உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில் ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.

எட்டு மணி நேர வேலை...

இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில் உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம் ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காங்கே தொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடு கூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும் இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.

1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கிய தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில், "எட்டுமணி நேர வேலை! எட்டுமணி நேரம் ஓய்வு! எட்டுமணி நேரம் பொழுதுபோக்கு!" (" LABOR CREATS ALL WEALTH " என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURS FOR REST, EIGHT HOURS FOR RECREATION !") என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களை வசீகரிக்கும் மந்திரச் சொல்லானது.

பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டு
மகிழ்ந்தனர். அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்த வெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால் என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்று ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம் கொண்டாடினர்.

1894 ல்.....

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது. 1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது.

இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகின்றனர். பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும் நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள்? இயக்க நடவடிக்கை களை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.

பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது வழக்கம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றிஈ?யங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள் விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?

Quelle - e Sangamam

Sunday, April 24, 2005

தந்தை செல்வா

- தமிழ்வாணன் -

எதிர்வரும் 26 ம்திகதி(April 26) தந்தை செல்வா அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழீழ தாயக பிரதேசங்களில் எழுச்சியாக கொண்டாடப்படஇருக்கிறது.

இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார்.

பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.

1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட் டது. இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப் போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார்.

அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது "நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

Quelle - http://thamilsangamam.blogspot.com/2005/04/blog-post_22.html

Thursday, April 07, 2005

முல்லா நஸ்ருதீன் - நகைச்சுவை ஞானி

குறிப்பும் கதைகள் மொழி பெயர்ப்பும்: சங்கரராம சுப்ரமணியன்

இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208_ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284_ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர்பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம் பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான நேரத்தில் முல்லா கதைகளைப் பொருத்திப் பார்க்கும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.

முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் உருவாகும் முரண்கள், சமூக நீதியின்மை, வகுப்புப் பிரிவு, சுயநலம், கோழைத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, குறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13_ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப் பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர், மன்னர், அரசியல்வாதி, குமாஸ்தா, அறிஞர், வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து விடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.

முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும், பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்? இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள், நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன், தன் வாழ்வை நகர்த்த எத்தனை எத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடுகிறான் என்பதை தெரிவிப்பவை முல்லாவின் கதைகள். முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள், முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.

முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காணமுடியும். பஷீரின் கதை சொல்லி உடலும், எல்லா மனிதர்களின் அல்பத் தனங்களோடும், சிறிய எண்ணற்ற தந்திரங்கள், மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள், உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையை பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா களங்கங்களோடும் ஏற்றுக்கொண்டு, ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது ‘பாத்துமாவின் ஆடு’ கதையில் கதை சொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு எல்லாவற்றையும் சமன் செய்யும் உயிரியாக வீடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் பஷீரின் சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்திற்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.

ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் சில கதைகளும் வண்ணமயமான சித்திரங்களும், ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம், இந்த உலகின் யார் மீதும் இல்லை’’ என்கிறார் ஓஷோ. அவரது எல்லா பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம் பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றி பேசும்போது, ‘‘மதத்தையும், சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும், நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும், நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கிய சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும் போது, தியானம் சிரிக்கும்போது, சிரிப்பு தியானமாகும் போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள், கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோ, மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்’’ என்கிறார்.

கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், ‘‘இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது. தத்துவவியலாளர்களில் ஓஷோவுக்கு நல்ல நகைச்சுவைத்திறன் உண்டு. ஓஷோவுக்கு வசீகரமானவராக முல்லா நஸ்ருதீன் ஏன் இருக்கிறார் எனப் பலமுறை யோசித்துள்ளேன். முல்லா தன் கதைகளில் தன்னையே பகடிக்கு உட்படுத்திக்கொள்வதுதான், முல்லா கதைகளின் பிரத்யேக அழகு எனத் தோன்றுகிறது’’ என்கிறார்.

வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால், அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது. எதையும் வெற்றிகொள்ளவில்லையே என்ற கேள்வியை உங்களிடம் எழுப்பலாம். ஆனால், வெற்றி என்பதன் அர்த்தம் என்ன? ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்? ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

முல்லா கதைகள்

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’ என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’ என்றார் முல்லா.

ரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார். ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.

முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.

முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.

தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.

முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.

‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்

Tuesday, February 22, 2005

றம்புட்டான்



றம்புட்டான் rambutan இதன் தாவரயியல் பெயர் Nephelium lappaceum. இது Lycheeக்கு நெருங்கிய சகோதரன் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு வேடிக்கையான தோற்றம் கொண்ட தலையலங்காரம் போல காணப்படும் இதன் பூர்விகம் மலேசியா ஆகும். சுவையில் இதற்கும் Lycheeக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் இதுஅதிகளவு சுவையானது




Nantri - Yarl.com & vasisutha

அன்னையர் தினம்

ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.


தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. .இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா?

எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.

"அனா ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா?ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அனா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மக்ழிச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியன்றை விற்று காசு. ...ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் "செண்டிமெண்ட்" நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.

கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 14,37,306 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப! வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடைவிரித்துள்ளனர்! அன்னையின் உருவப் படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம். வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை"

Thursday, February 10, 2005

Lychee



இதற்கு தமிழ் பெயர் என்னவென்று தெரியவில்லை. இதன் தாவரயியல் பெயர் Litchi chinensis ஆகும். Sapindaceae குடும்பத்தை சார்ந்த இதன் பூர்விகம் சீனா ஆகும். இப்பழத்தில் 24 வகையான இனங்கள் உண்டு.


இப்பழம் அதிகம் விளையும் காலம் மே மாத நடுப்பகுதியில்
இருந்து யூன் நடுப்பகுதி வரையாகும். தெற்கு புளோரிடாவில் இது அதிகளவில் விளைகிறது.

nantri - Vasisutha & yarl.com

பலாப்பழம்



தமிழில் பலாப்பழம்.. ஆங்கிலத்தில் Jakfruit என
அழைக்கப்படும் இப்பழத்தின் தாவரயியல் பெயர்
Artocarpus heterophyllus இது Moraceae குடும்பத்தை
சார்ந்த இனம். ஓங்கி உயர்ந்து பரவி வளரும் மரம்..



இதனை காயாக இருக்கும் போதும் சமையலுக்காக பயன்படுத்துவர்.
விதைகளும் உணவுப்பொருளாக பயன் படுத்தப்படுகிறது.

nantri - Vasisutha & yarl.com