Thursday, April 07, 2005

முல்லா நஸ்ருதீன் - நகைச்சுவை ஞானி

குறிப்பும் கதைகள் மொழி பெயர்ப்பும்: சங்கரராம சுப்ரமணியன்

இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208_ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284_ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர்பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம் பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான நேரத்தில் முல்லா கதைகளைப் பொருத்திப் பார்க்கும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.

முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் உருவாகும் முரண்கள், சமூக நீதியின்மை, வகுப்புப் பிரிவு, சுயநலம், கோழைத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, குறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13_ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப் பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர், மன்னர், அரசியல்வாதி, குமாஸ்தா, அறிஞர், வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து விடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.

முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும், பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்? இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள், நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன், தன் வாழ்வை நகர்த்த எத்தனை எத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடுகிறான் என்பதை தெரிவிப்பவை முல்லாவின் கதைகள். முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள், முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.

முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காணமுடியும். பஷீரின் கதை சொல்லி உடலும், எல்லா மனிதர்களின் அல்பத் தனங்களோடும், சிறிய எண்ணற்ற தந்திரங்கள், மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள், உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையை பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா களங்கங்களோடும் ஏற்றுக்கொண்டு, ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது ‘பாத்துமாவின் ஆடு’ கதையில் கதை சொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு எல்லாவற்றையும் சமன் செய்யும் உயிரியாக வீடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் பஷீரின் சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்திற்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.

ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் சில கதைகளும் வண்ணமயமான சித்திரங்களும், ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம், இந்த உலகின் யார் மீதும் இல்லை’’ என்கிறார் ஓஷோ. அவரது எல்லா பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம் பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றி பேசும்போது, ‘‘மதத்தையும், சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும், நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும், நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கிய சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும் போது, தியானம் சிரிக்கும்போது, சிரிப்பு தியானமாகும் போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள், கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோ, மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்’’ என்கிறார்.

கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், ‘‘இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது. தத்துவவியலாளர்களில் ஓஷோவுக்கு நல்ல நகைச்சுவைத்திறன் உண்டு. ஓஷோவுக்கு வசீகரமானவராக முல்லா நஸ்ருதீன் ஏன் இருக்கிறார் எனப் பலமுறை யோசித்துள்ளேன். முல்லா தன் கதைகளில் தன்னையே பகடிக்கு உட்படுத்திக்கொள்வதுதான், முல்லா கதைகளின் பிரத்யேக அழகு எனத் தோன்றுகிறது’’ என்கிறார்.

வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால், அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது. எதையும் வெற்றிகொள்ளவில்லையே என்ற கேள்வியை உங்களிடம் எழுப்பலாம். ஆனால், வெற்றி என்பதன் அர்த்தம் என்ன? ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்? ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

முல்லா கதைகள்

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’ என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’ என்றார் முல்லா.

ரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார். ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.

முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.

முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.

தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.

முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.

‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்

2 comments:

Balaji-Paari said...

மிகவும் சிறப்பான பதிவு சந்திரவதனா.
முல்லா நஸ்ரூதின் தொடர்பாக யாஹூ குழுமம் எனக்கு தெரிந்து ஒன்று உள்ளது.
நன்றிகள்

Unknown said...

முல்லா பற்றிய உங்கள் ஆக்கம் அருமை... முல்லா எதோ ஒரு சிரிக்க வைக்க உருவாக்கிய கற்பனை பத்திரம் என்றே இதுவரை நினைத்திருந்தேன்.. மிக்க நன்றி..