- மூர்த்தி -
திருமணம்:
திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.
தாலி:
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.
அருகு-மணை எடுத்தல்:
தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.
"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.
பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.
ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.
பிள்ளையார் வழிபாடு:
மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.
முகூர்த்தக்கால் நடுதல்:
முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
அரசாணிக்கால் நடுதல்:
மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.
மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.
திருமண வேள்வி:
அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.
பாலிகை இடுதல்:
நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.
ஆறு குணங்கள்:
1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.
பதினாறு பேறுகள்:
1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.
மஞ்சள், மருதாணியின் சிறப்பு:
1. குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2. மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3. மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4. கை, கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
இது மிகத் தொன்மையான பழக்கமாகும். கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.
அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.
சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.
வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்குக் கொடுக்கின்றோம் என இருவீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.
உறவின்முறை விளக்கம்:
கணவன், கொழுநன்:
கண் அவன். பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும். நம்மை நல்வழி நடத்திச் செல்லும் கண்ணைப் போல் பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.
கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.
மனைவி:
மனைவி, துணைவி, இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.
கொழுந்தனார்:
கொழுநன் அன்னார்= கொழுந்தனார். கொழுந்தனார் கணவனின் தம்பியைக் குறிப்பது. உன் கண்ணைப்போல் இக்குடும்பத்தில் உரிமை உடையவன் என்பதாகும்.
விளக்கு வகைகள்:
1. வெண்கல விளக்கு ஏற்றினால்- பாபம் போகும்.
2. இரும்பு விளக்கு ஏற்றினால்- அபமிருத்யுவைப் போக்கும்.
3. மண்விளக்கு ஏற்றினால்- வீரிய விருத்தியை அளிக்கும்.
குறிப்பு: மண்ணால் செய்யப்பட்ட அகல் அல்லது வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆன விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்ததாகும். பஞ்சலோகமானது தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு ஆகும். ஐம்பொன் என்றும் சொல்வதுண்டு.
தீபங்களும் திசைகளும்:
1. கிழக்குத்திசை: கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும்.
2. மேற்குத்திசை: மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.
3. வடக்குத் திசை: வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
4. தெற்குத்திசை: தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது!
முகங்களுக்குரிய பலன்கள்:
1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால்- மத்திம பலன்.
2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும்.
3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும்.
4. நான்கு முகங்கள் ஏற்றுவதால்- பசு, பூமி, பாக்கியம் தரும்.
5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால்- செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.
குறிப்பு: விசேட காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.
தீப வழிபாடு:
அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.
புரோகிதர், புரோகிதம்:
புரோகிதர் என்றால் முன் நின்று நன்மையைச் செய்கின்றவர் என்று அர்த்தம். புரோ= முன், கிதம்= நன்மை.
ஆபரணங்களால் ஏற்படும் நன்மைகள்:
தங்கம், வெள்ளி நகைகள் அணிவதால் உடல் நலம் சிறக்கும். தங்கம் உடலுக்குச் சூட்டையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்கின்றது. தங்கத்துடன் செம்பு சேர்த்து ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன. செம்பு சூரியக் கதிர்களை இழுத்து உடலில் படவைக்கின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும். ஆயுர்வேத முறைப்படி இரத்த சுத்தி, மூளைவளர்ச்சியை அதிகப்படுத்துதல், உடலுக்கு நிறம் கிடைத்தல் ஆகியவை தங்கத்தால் கிடைக்கும். வலது கைவிரலில் மோதிரம் அணிந்து சாப்பிடும்பொழுது தங்கத்தின் மிகச்சிறிய பகுதி உடலுக்குள் செல்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி நகைகளால் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும்.
ஆலத்தி எடுத்தல்:
* மங்கள மங்கையர் மணமானவுடன் மஞ்சள் நீர் உள்ள தட்டை மணமக்கள் முன் சுற்றி வாழ்த்துவர்.
* மஞ்சள் நச்சுப் பொருட்களை மாற்றவல்லது. மஞ்சள் திருநீறு இட்டு ஆலத்தி எடுத்து வாழ்த்துவது நச்சுத்தன்மையை நீக்கும்.
* மஞ்சள் நீர் போன்று உங்கள் வாழ்வில் வலம் வரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுவதாக என்று அர்த்தம்.
வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:
1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.
Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts
Friday, March 21, 2008
Subscribe to:
Posts (Atom)
