Sunday, March 19, 2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 3

கண்டுபிடித்தவர்களின் கதை
_ உதயபிரபா _

ரப்பர் மனிதன்!

'ரப்பர்' என்கிற பொருள் இல்லாமல் இன்றைக்கு உலகில் எதுவும் இயங்காது. அந்த அளவுக்கு ரப்பரின் பயன்பாடு இருக்கிறது. வாகனங்களின் பிரேக்குகள், டயர்கள், முக்கிய இயந்திர பாகங்கள் என்று ரப்பரின் பயன்பாடு ஏராளம். ஆனால் ஆரம்பத்தில் ரப்பர் மரத்திலிருந்து வடியும் பிசினாகத்தான் இருந்தது. கொஞ்சம் வெப்பம் அதிகரித்தால் அதனால் செய்யப்படும் பொருட்கள் உருகி ஓடிவிடும். அதனால் இதை யாரும் பயன்படுத்த முடியவில்லை. அப்போது தான் சார்லஸ் குட்இயர் என்பவர் இதைப் பார்த்தார். வெப்பத்தைத் தாங்குமளவுக்கு ரப்பரை உருவாக்க எண்ணினார். தன் வாழ்நாள் முழுவதையுமே அதற்காகக் கொடுத்தார். ஆனால் அமெரிக்காவே அவரை எள்ளி நகையாடியது. 'பைத்தியக்காரன்' என்று ஏசியது. அவர் கடன்களுக்காக அவரை சுமார் பத்துமுறைக்கும் மேல் சிறைக்கம்பிகளின் பின்னே தள்ளியது. ரப்பரை வெப்பத்தைத் தாங்குமளவுக்கு உறுதியான பொருளாக ஆக்கலாம் என்று கண்டுபிடித்த பிறகும் குட்இயர் வறுமையில் தான் வாடினார். அவர் இறக்கும் போது அவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துவிட்டுத்தான் இறந்து போனார். இந்த மனிதருக்கு நேர்ந்த கொடுமை எந்த கண்டுபிடிப்பாளனுக்கும் நேரக்கூடாது!

பிறவி விஞ்ஞானி!

சார்லஸ் குட்இயரின் அப்பா அமாஸ் குட்இயரும் ஒரு கண்டுபிடிப்பாளர்தான். அமெரிக்காவில் கனெக்டிகெட்டில் வசித்துவந்த அவர் அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் அனைத்தையுமே ஏதோ ஒரு வழியில் மேலும் பயனுள்ளதாக ஆக்க முயன்றார். பிரிட்டிஷ் படைகளுடன் அமெரிக்க படைகள் மோதியபோது, அந்த ராணுவத்தினர் அணிந்திருந்த சீருடையின் பட்டன்கள் அமாஸ் கண்டுபிடித்தவை.
அவரது மகனான சார்லஸீக்கு ஆரம்பத்தில் இதில் நாட்டமில்லை. அப்பாவின் கண்டுபிடிப்புகளை விற்பதுதான் அவரது வேலை. அதையும் வேண்டாவெறுப்பாக செய்தார். அவருக்கு அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அமாஸ் தன் மகன் சார்லஸை அதற்கெல்லாம் அனுமதிக்கவில்லை. தன்னுடைய சிறிய ஆய்வகத்தில் வேலை செய்யும்படி பார்த்துக்கொண்டார்.

ஒருகட்டத்தில் குட்இயர்கள் இருவரும் ஒரு ஹார்டுவேர் கடையை ஆரம்பித்தார்கள். அந்த காலத்தில் ஹார்டுவேர் கடைகள் என்று தனியாக எதுவும் கிடையாது. அதுமாதிரி பொருட்களை விற்பவர்கள், அவற்றை முதுகில் சுமந்து சென்று வீடு, வீடாக அலைந்து விற்பார்கள். அதிலிருந்து வித்தியாசமாக இவர்கள் ஆரம்பித்த கடை நன்றாக 'பிக்_அப்' ஆனது. ஆனால் சார்லஸீக்கு பணத்தில் அவ்வளவாக கவனமில்லை. கேட்டபவர்களுக்கெல்லாம் கடனுக்கு பொருட்களை வாரிவழங்கினார். ஒருகட்டத்தில் அந்த பொருட்களுக்குப் பணத்தை வசூலிக்க முடியவில்லை. சார்லஸின் தாராளமனம் கடனாளிகளை வற்புறுத்தி வசூலிக்க இடம் கொடுக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் ஓர் ஏமாளி!
இதனால் கடையினால் ஏற்பட்ட நஷ்டம் பெரிய கடனாக உருவெடுத்தது. இந்த கடனுக்கு தானே பொறுப்பு என்று முன்வந்த சார்லஸீக்கு தண்டனை காத்திருந்தது. அந்த காலத்தில் கடனைத் திருப்பிக் கட்டவில்லையென்றால் சிறையில் போட்டுவிடுவார்கள். முப்பது வயதில் ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்த சார்லஸ் எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முறையாக 1830_ல் சிறைக்குப் போனார்.

வெளியே வந்த பிறகு பிற நகரங்களில் தொழில் தொடங்கி மேலும் கடனாளி ஆனார். இப்படி அடுத்தடுத்த நான்கு வருடங்களில் ஆறுமுறை ஜெயிலுக்குப் போய் திரும்பினார் அவர். வாழ்க்கையில் முன்னேற தொழில் செய்வது தனக்கு வெற்றிதராது என்று அவருக்குத் தெரிந்தது. ஏதாவது செய்தால்தான் குடும்பத்தினருக்கு சோறு போட முடியும். எதையாவது கண்டுபிடித்து அதை விற்றால் காசு கிடைக்கும். எதைக் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

முதன் முதலில் ரப்பரைப் பார்க்கிறார்!

1834_ல் ஒரு நாள். பாஸ்டன் நகரில் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த போது ஒரு கடையில் ரப்பரால் ஆன, காற்றடைத்தால் தண்ணீரில் மிதக்கும் ஆடைகளைப் பார்த்தார். உடனே விறுவிறுவென்று கடைக்குள் போய் விசாரித்தார். 'ரப்பர்' என்ற பொருளோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது அப்படித்தான். அந்த ரப்பர் ஆடைகளை இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக ஆக்கும் ஐடியா அவருக்கு வர, அதைச் சொல்லி, அந்த கடையின் உரிமையாளரை 'இம்ப்ரெஸ்' செய்த அவர் 'மேலும் ஐடியாக்களுடன் சில நாட்கள் கழித்து வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அந்த சில நாட்களில் நிலைமையே மாறிவிட்டது.


அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ் குழுவினர் ரப்பர் பந்துகளை வைத்து அங்குள்ள பழங்குடியினர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 'கேட்சௌக்' என்று அழைக்கப்பட்ட அந்தப் பொருள் அதன் பின்னர் சில காலம் கழித்து ஐரோப்பியர்களைக் கவர்ந்தது. அதை வைத்து பேப்பரில் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிக்கலாம் என்று கண்டுபிடித்து அதற்கு 'அழிப்பான்' என்று பொருள் வரும் 'ரப்பர்' என்ற பெயரை ஜோசப் ப்ரிஸ்ட்லி என்ற விஞ்ஞானி வைத்தார்.

பின்னர் இதை வைத்து 'வாட்டர் ஃப்ருப்' துணிகளைத் தயாரித்தார்கள். இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவிலும் இதுபோன்ற ரப்பர் துணிகள் தயாரிக்கப்பட்டன. அவை மார்க்கெட்டுக்கு வந்தவுடன் அவை குட்இயர் கண்ணில்பட்டன.

ஓ.கே.... குட்இயர் தன் ஐடியாக்களை உருவாக்கிய அந்த சில நாட்களில் அமெரிக்காவின் கோடைக்காலம் வந்தது. வெப்பம் அதிகரித்து, வெப்ப அலை வீசியது. இதை ரப்பர் துணிகளால் தாங்க முடியாமல் அவை உருகிவிட்டன. கோடவுன்களில் அவை உருகிஓட, இந்த துணிகளை வாங்கிப் போனவர்களோ திருப்பிக் கொண்டுவந்து கடையில் கொடுத்துவிட்டார்கள். ரப்பர் தொழில் ஆரம்பத்திலேயே 'படுத்து'க் கொண்டுவிட்டது!

ரப்பரை பல வழிகளில் பயன்படுத்த முடியும். ஆனால் அது வெப்பத்தை தாங்காது. அதிகப்படியான குளிரில் பாளம்பாளமாக உடைந்துபோகும் என்ற பிராக்டிகல் உண்மை குட்இயருக்குப் புரிந்தது. ஆனால், இந்த ரப்பரை வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதியுள்ளதாக ஆக்கலாம் என்று புதிய ஐடியா அவருக்குப் பளிச்சிட்டது! அந்த ஐடியா அவரை கிட்டத்தட்ட பைத்தியக் காரன் ஆக்கிவிட்டது. படாதபாடு படுத்தியது!

இந்த ஐடியாவோடு வீடு திரும்பிய அவரை எதிர்பார்த்து ஒரு கடனாளி காத்திருந்தான்! அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்டான்!

சிறைச்சாலையே ஆய்வுக் கூடம்!

இம்முறை சிறைக்குப் போன குட்இயர் கொஞ்சம் வருத்தப்படவில்லை. சிறைச்சாலையில் தனக்குகிடைத்த நேரத்தை முறையாக செலவிட்டு தன் ரப்பர் ஆராய்ச்சியைத் தொடரவே விரும்பினார். ஜெயிலரிடம் தன் அறையையே சிறிய ஆய்வகமாக மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டார். அதிசயமாக ஜெயிலரும் அதை அனுமதிக்க, தன்னைப் பார்க்க வரும் மனைவியிடம், அவரால் முடிந்த அளவுக்கு ரப்பரும், வேதிப்பொருட்களும் கொண்டுவரும்படி கேட்டு, இரவு பகலாக தன் அறையிலே ஆராய்ச்சியைத் தொடர்ந்துவிட்டார். அந்த ஆராய்ச்சியில் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். மெக்னீஸியத்தைக் கலந்தால் ரப்பரின் ஒட்டும்தன்மை குறைந்துவிடுகிறது என்பது தான் அது.

சிறையிலிருந்து வெளியே வந்ததும், இதை வைத்து நிறைய பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்தார். ஓரளவுக்கு விற்பனை ஆகி, குடும்பம் மூன்று வேளை வயிறார சாப்பிட்டது. குட்இயர் தன் கண்டுபிடிப்புக்கான சில மெடல்களையும் வாங்கினார். இருந்தாலும் அவர் கண்டுபிடிக்க நினைத்த 'ரப்பர் ரகசியம்' அவரிடம் மாட்டவே இல்லை. அது எதிர்பார்க்காத ஒரு விதத்தில் கிடைத்தது. அது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்!

quelle - kumutham-march2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 2

கண்டுபிடித்தவர்களின் கதை
_ உதயபிரபா _

அச்சத்தை உருவாக்கிய 'அச்சு' மனிதர்!

1814. நவம்பர் மாதம் 29_ம் தேதி. காலையில் 'தி டைம்ஸ்' பத்திரிகையை வாங்கி பார்த்த லண்டன் வாசிகள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார்கள். பிரித்துப் பார்த்த போது அதில் இருந்த செய்தியன்று அச்சுத்தொழிலில் ஏற்பட்டிருக்கும் புதிய புரட்சியைப் பற்றிச் சொன்னது. "இதுவரை கையால்தான் எழுத்துக்களைக் கோர்த்து, அச்சுக்களை பேப்பரில் பதித்து அச்சிட்டு வந்தோம். இப்போது கிடைத்திருக்கும் புதிய இயந்திரம் மனிதர்கள் வேலையை தானே படுவேகத்தில் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் 1100 காப்பிகள் அடித்துத்தள்ளிவிடுகிறது. அப்படிப்பட்ட இயந்திரத்தை உலகிலேயே நாங்கள் தான் முதல் முதலில் பயன்படுத்தியுள்ளோம்" _என்றது அந்த செய்தி.

இந்த இயந்திரத்தை அரும்பாடுபட்டு கண்டுபிடித்தவர் பெயர் கோனிக். உலகில் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டிய சிரமங்கள் அனைத்தையும் அனுபவித்து நொந்து நூலானவர். ஐரோப்பாவில் பிறந்த கோனிக்கின் குடும்பம் வறுமையின் பிடியிலிருந்தது. அவரது அப்பாவால் கோனிக்கை பள்ளிப்படிப்பையே ஒழுங்காக படிக்கவைக்க முடியவில்லை. 13_வயதிலேயே தன் சாப்பாட்டுக்கு தானே உழைக்க வேண்டிய கட்டாயம் கோனிக்குக்கு வந்துவிட்டது. சிறுவனாக இருந்தபோதே அவர் ஒரு அச்சகத்தில் உதவியாளராக சேர்ந்தார். இதுதான் அவர் செய்த உருப்படியான காரியம்.

இந்த சிறுவன் மணிக்கணக்கில் ஆமை வேகத்தில் நடக்கும் அச்சக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சிடும் முறையை கண்டுபிடித்த கூட்டன்பர்க் காலத்திலிருந்து சுமார் 400 ஆண்டுகளாக அதே முறையைத்தான் கையாண்டு வந்தார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.

கோனிக் மனதில் அப்போது உருவாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நீராவி இயந்திரங்கள் அலை மோதின. இவற்றைப் பயன்படுத்தி அச்சிடும் முறையை வேகமாக்கலாமே என்று தோன்றியது. இந்த ஐடியா 'பளிச்'சிட்ட பிறகு கோனிக்கால் தூங்க முடியவில்லை. ஆனால் அதை செயல்படுத்தத்தான் எந்த வசதியுமில்லை. அப்படியரு இயந்திரத்தைக் கட்ட பணம் வேண்டுமே?

கோனிக் யார் யாரிடமோ போய் உதவி செய்யுமாறு கோரினார். அந்த இளைஞனைப் பார்த்து யாருக்கும் நம்பிக்கை வரவில்லை போலிருக்கிறது. விரட்டி விரட்டி அடித்தார்கள். அத்துடன் அங்கே காப்புரிமை வாங்குவதற்கும் அரும்பாடு பெற வேண்டும். ஒரு கண்டு பிடிப்புக்கு ஜெர்மனி முழுவதும் காப்புரிமை வாங்குவதென்றால் எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டும். வேலை செய்தால் தான் சாப்பாடு என்றிருக்கும் கோனிக் அதெற்கெல்லாம் எங்கே போவார்?

அதனால் திடீரென்று ஒரு நாள் கண்கள் நிறைய கனவோடும், தன் ஐடியா ஒன்றை மட்டுமே சொத்தாகக் கொண்டும் இங்கிலாந்துக்குக் கப்பலேறி விட்டார். அந்த நாட்டில் காப்புரிமைச் சட்டங்கள் உறுதியானவையாக இருந்ததும் ஒரு காரணம்.

வந்த இடத்தில் கையில் காசு இல்லாததால் ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்துகொண்டார். பென்ஸ்லி என்ற 'விவர.மான' ஆள் ஒருவர் இவரது ஐடியாவை செயல்படுத்திப் பார்க்க ஆர்வம் கொண்டார். மெஷினைக் கட்டுவதற்கு மெக்கானிக் வேண்டுமே? ஜெர்மனியிலிருந்து கோனிக்கைப் போல கையில் பைசா கூட இல்லாமல் வந்திருந்த பேயர் என்பவர் கிடைத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

கோனிக் இயந்திரத்தை பேப்பரில் டிசைன் செய்ய அதற்கு இயந்திரவடிவத்தை பேயர் கொடுத்தார். முதல் நவீன அச்சிடும் இயந்திரம் உருவானது. 20க்கு 32 இஞ்ச் சைஸ் உள்ள நாலுபக்கம் அடங்கிய தாளில் இந்த மெஷின் ஒரு மணி நேரத்துக்கு 1,100 காப்பிகள் பிரிண்ட் செய்து கொடுத்தது. அதாவது இது அப்போது கையால் செய்யப்பட்ட வேலையின் வேகத்தைவிட நான்கு மடங்கு அதிகம்! மெஷின் மிக அற்புதமாக வேலை செய்தது. ஆனால் இதை யாருக்காவது விற்கவேண்டுமே... இவர்களுக்கு உதவியாக இருந்த பென்ஸ்லி நேராகப் போய் லண்டனின் பெரிய பத்திரிகையான 'தி டைம்ஸின்' உரிமையாளர் ஜான் வால்டரை சந்தித்தார்.

ஆரம்பத்தில் அப்படியரு மெஷின் இருக்குமா என்று தயங்கிய வால்டர் நேரில் வந்து பார்த்துவிட்டு அசந்து போனார். வாவ்... என்ன வேகம்!

"எனக்கு நான்கு மெஷின்கள் செய்து கொடுங்கள்!" என்று அந்த இடத்திலேயே காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு திரும்பினார் வால்டர்.

இதைச் செய்துமுடித்து வால்டருக்கு டெலிவரி கொடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இயந்திரங்களைப் பற்றி அதற்குள் தெரிந்து கொண்டிருந்த டைம்ஸின் அச்சக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இந்த மெஷின்களை அச்சகத்தில் நுழையும் வழியை மறித்தார்கள். அதைக் கொண்டுவரவே முடியவில்லை. வால்டர் ஓர் ஐடியா செய்தார். ஒரு ரகசியமான இடத்தில் அந்த மெஷின்களை நிறுவினார்.

ஒரு நாள் காலையில் பேப்பரை அச்சடிப்பதற்காக காத்திருந்த தன் அச்சக ஊழியர்களுக்கு "சற்று நேரம் காத்திருங்கள். ஒரு முக்கியமான செய்திக்காக காத்திருக்கிறோம்!" என்று தகவல் அனுப்பினார். அதை நம்பி அவர்கள் காத்திருக்க, இங்கே ரகசியமாய் இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தன. அச்சிடப்பட்ட 'டைம்ஸ்' காப்பிகளை எடுத்துக் கொண்டுபோய் அந்த ஊழியர்களை சந்தித்தார் வால்டர். அவர்களிடம் அவற்றை நீட்ட... அதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் அச்சக ஊழியர்கள்.

"நீங்கள் எல்லோரும் வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளுங்கள். அதுவரை நான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறேன்!" என்று உறுதி மொழி கொடுத்து அச்சக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் வால்டர். கசப்போடு வீட்டுக்குப் போனார்கள் அவர்கள்.

இந்த இயந்திரம் தான் அச்சு உலகில் பெரும் புரட்சியை உருவாக்கி உலகெங்கும் உள்ள பத்திரிகைகள் இதே தொழில்நுட்பத்தை தழுவ வைத்தது. பிரதிகளின் எண்ணிக்கை கூடி, பத்திரிகை விலையும் குறைந்தது. சரி... நமது கண்டுபிடிப்பாளர் கோனிக்கும், பேயரும் என்ன ஆனார் என்று பார்க்க வேண்டாமா?

இவர்களுக்கு கிடைத்த பணத்தில் பெரும்பங்கு பென்ஸிலிக்குப் போய்விட்டது. அதுபோக மீதிப்பணம் கடன்களுக்கே சரியாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கையுடன் பிறகு ஜெர்மனிக்கே திரும்பிய இவர்கள் அங்கே ஒரு பள்ளியை தொழிற்சாலை ஆக்கி, இந்த இயந்திரங்களை உருவாக்கும் வேலையை ஆரம்பித்தார்கள். ஆனால் தரமான மெக்கானிக்குகள் கிடைக்கவில்லை. அதனால் புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து பயிற்சி அளித்தார்கள். இதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன. கடைசியில் 1822_ம் ஆண்டிலிருந்து இயந்திரங்கள் உருவாகி சப்ளை ஆரம்பித்தது. உலகெங்கும் தன் இயந்திரங்கள் பயன்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதை பார்த்து விட்டு தன் அறுபதாம் வயதில் இறந்தார் கோனிக்.

கோனிக் ஆரம்பித்த தொழிற்சாலை ஜெர்மனியில் இன்னமும் இருக்கிறது!

quelle - Kumutham-march2006

ஆகாய விமானமும்... தையல் எந்திரமும்...! - 1

கண்டுபிடித்தவர்களின் கதை _ உதயபிரபா _

நடுக்கடலில் காணாமல் போனவர்!

அந்த படகு பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்து நோக்கிக் சென்று கொண்டிருந்தது. அதில் ஓர் உலகப் புகழ்பெற்ற மனிதர் இருந்தனாலோ, என்னவோ, அந்த பெரிய படகும் கர்வத்தோடே சென்றுகொண்டிருந்தது. அந்த மனிதர் ருடால்ஃப் டீசல். அவருடைய நண்பர்கள் சிலரும், வியாபார கூட்டாளிகள் சிலரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இரவு பத்து மணி ஆகும் வரை அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் டீசல். பிறகு 'நாளை காலையில் பார்ப்போம்!' என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார். அனைவரும் கைக்குலுக்கி விட்டு தங்கள் அறைகளுக்குச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் ருடால்ஃப் டீசலைக் காணவில்லை. அவர் கைகடிகாரம், சூட்கேஸ் ஆகியவை மட்டும் அறையில் இருந்தன. நடுக்கடலில் டீசல் காணாமல் போய்விட்டார்.

பிரான்சில் வசித்த ஜெர்மானிய பெற்றோருக்குப் பிறந்த ருடால்ஃப் டீசல் 12 வயதான போது குடும்பத்துடன் லண்டனுக்கு வந்துவிட்டார். அங்கே சில நாட்கள் இருந்த பிறகு பவேரியாவுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. அங்கே தான் பள்ளிப்படிப்பு.

1878_-ஆம் ஆண்டில் ஒரு நாள் நீராவி எஞ்சின் பற்றி அவரது ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். "எரிபொருள் எரிக்கப்படும் போது உருவாகும் வெப்பத்தில் ஆறிலிருந்து ஏழு சதவீதம் மட்டுமே ஆற்றலாக மாறுகிறது" என்று நீராவி எஞ்சின் பற்றி குறைப்பட்டுக் கொண்டார் அவர். அது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டு இயற்பியல் அறிஞர் கார்னாட் (நீணீக்ஷீஸீஷீt) என்பவர் சொன்ன எல்லா வெப்பமும் ஆற்றலாக மாறுதல் அடையும் என்ஜின் பற்றிய தியரியையும் விளக்கினார். கேட்டுக்கொண்டிருந்த ருடால்ஃப் தன் நோட்டின் ஒரு ஓரத்தில் "இந்த எஞ்சினை நான் கண்டு பிடிப்பேன்!" என்று எழுதி வைத்துக் கொண்டான்.

ஆனால் அதை உருவாக்க அவர் பதினைந்து ஆண்டுகள் போராட வேண்டிருந்தது. உண்மையில் விஷயம் மிகவும் ஸிம்பிளானது. எஞ்சினின் சிலிண்டரில் வெப்பநிலையை ஒரே சீராக வைத்தால் உருவாகும் வெப்பம் அனைத்தும் ஆற்றலாக மாறிவிடும். ஆனால் அதைச் செய்வது எப்படி?

"படிப்பை விட்டுவிட்டு பிழைப்புக்காக வேலைகள் செய்ய வந்துவிட்டேன். ஆனால் இந்த எஞ்சின் பற்றிய ஐடியா என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது" என்று நினைவு கூர்கிறார் டீசல்.

இதுபற்றி ஆராய்ச்சி செய்து மூளையை உடைத்து ஒரு சிறிய புத்தகத்தை வெளியிட்டார் டீசல். அதில் இந்த எஞ்சின் செய்வது பற்றிச் சொன்ன அவர்... அதற்கான காப்புரிமையை முதல் ஆளாக வாங்கிக் பத்திரப்படுத்திக் கொண்டார். அந்த அளவுக்கு புத்திசாலியாக இருந்தார் அவர். இந்த புத்தகம் வெளிவந்த உடனே எந்திரங்களின் உலகம் அவரை ஒரே நாளில் அறிந்துகொண்டது. பெரிய பெரிய கம்பெனிகள் இவரது ஐடியாவை பரிசோதிக்க முன்வந்தன. நான்கு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு முதல் டீசல் என்சின் உருவாகிவிட்டது.

எரிபொருள் எரிக்கப்படும் போது உருவாகும் எல்லா வெப்பத்தையும் ஆற்றலாக மாற்ற வேண்டும் என்ற கார்னாட்தியரியை டீசலால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய எஞ்சின் அப்போது உபயோகத்தில் இருந்த பெட்ரோல் எஞ்சின்களை விட, அதிகப்படியான ஆற்றலைக் கொண்டதாக இருந்தது.

இந்த எஞ்சினின் சிலிண்டரில் அடைபடும் காற்று, எரிபொருளாகப் பயன்படும் எண்ணெயை எரிக்கும் அளவுக்கு அழுத்தத்தின் மூலம் சூடாக்கப்படுகிறது. அதாவது... பிஸ்டன் காற்றை அழுத்துவதன் மூலம் அதன் வெப்பத்தை உயர்த்துகிறது. வெப்பம் உயர்ந்த பிறகு எண்ணெய் சிலிண்டருக்குள் வழிய விடப்படுகிறது. உடனே 'குப்'பென்று பற்றிக் கொண்டு வெடிக்கிறது பிஸ்டன் வேகமான இயக்கப்படுகிறது. இதுதான் டீசல் கண்டுபிடித்த எஞ்சினின் தத்துவம்.

-இதில் பெட்ரோலை விட அடர்த்தியான அவ்வளவாக சுத்தம் செய்யப்படாத எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அட்வான்டேஜ். இந்த எண்ணெய் தான் இப்போது 'டீசல்' என்று அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த எஞ்சினுக்கும் டீசல் எஞ்சின் என்றே பெயர் வந்து விட்டது.
இந்த எஞ்சினில் 35 சதவீத வெப்பம் ஆற்றலாக மாற்றப்பட்டது. பெட்ரோல் எஞ்சினில் இது 28 சதவீதம் மட்டுமே... நீராவி எஞ்சினிலோ வெறும் 12 சதவீதமாக இருந்தது. அப்புறமென்ன டீசலின் வெற்றிக்கு கேட்கவா வேண்டும்? இன்றைக்கும சாலைப் போக்குவரத்தில் டீசல் எஞ்சினை மிஞ்ச எதுவுமேயில்லை.

டீசலின் இந்த எஞ்சினை எந்திர உலகம் இருகைகளையும் அகல விரித்து வரவேற்றது. இருந்தாலும் அவருக்கு எதிரிகளும் இல்லாமல் இல்லை. ஹெர்பெர்ட் அக்ராய்ட்_ஸ்டுவர்ட் என்கிற ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர் டீசல் கண்டுபிடித்த இயந்திரம் போலவே ஒன்றை உருவாக்கியிருந்ததைச் சுட்டிக் காட்டி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் டீசலின் பெயர்தான் நிலைத்தது. பெயர் சுருக்கமான வாயில் நுழைகிற மாதிரி இருந்ததாலோ என்னவோ..?

டீசலின் இந்த வெற்றி அவரை வாழ்வின் உச்சகட்ட அந்தஸ்துக்குக் கொண்டுபோனது. பல நாடுகளில் வசித்திருந்ததால் உருவான பரந்துபட்ட அனுபவ அறிவு, பல மொழிகள் பேசும் திறன் ஆகியவையும் அவருக்குக் கைகொடுத்தன. ம்யூனிச் நகரில் அவர் ஆரம்பித்த கம்பெனிக்கு உலகம் முழுவதும் பல கிளைகள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் உலகம் அவரை மிகப் பெரிய அறிவுஜீவியாகக் கொண்டாடியது. அந்த நிலையில் தான் அவர் 1913_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று நடுக்கடலில் காணாமல் போனார்.

டீசல் காணாமல் போன மர்மம் பரபரப்பான செய்தியாக ஐரோப்பா முழுவதும் பேசப்பட்டது. படகிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்விக்கு... இவ்வளவு புகழின் உச்சியில், எல்லாவற்றையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என்றே பதில் வந்தது. அவரை யாரோ கொன்றிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டார்கள். அவர் படகிலிருந்து தவறி தண்ணீரில் விழுந்திருக்கலாம், அல்லது வேண்டுமென்றே தலைமறைவாகியிருக்கலாம் என்று பலப்பல யூகங்கள் ஆனாலும் மர்மம் சுத்தமாக விலகவில்லை.

அவர் காணாமல் போன நான்கு நாட்கள் கழித்து ம்யூனிச் நகரில் அவரைத் காணாத கவலையில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினருக்கு ஒரு தந்தி வந்தது. 'டீசல் லண்டனில் இருக்கிறார்' என்று அவர் கம்பெனி பெயரில் வந்தது அந்த தந்தி. அலறியடித்துக் கொண்டு லண்டன் முழுக்க சல்லடை போட்டுக் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அத்துடன் யார் தந்தியை அனுப்பியது என்றும் தெரியவில்லை.

இரண்டொரு நாள் கழித்து ஹாலந்து நாட்டுக் கடற்கரையில் ஒரு சடலம் கரையதுங்கியது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சடலத்தின் சட்டைப்பாக்கெட்டுகளைத் துழாவி அதிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சடலத்தை மீண்டும் கடலுக்குள்ளேயே போட்டுவிட்டார்கள். இந்த பொருட்கள் டீசலின் மகனுக்கு அனுப்பப்பட்டன. அவையெல்லாம் தன் தந்தையுடையவைதான் என்று அவர் உணர்ந்து கொண்டார். ஆனால் ஏன் தந்தை இப்படி இறந்தார் என்று அவருக்கும் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. அது புரிய மேலும் சில நாட்கள் ஆயின. டீசலின் வங்கி பேலன்ஸ் மற்றவர்கள் நினைத்திருந்த மாதிரியில்லை. அது அதலபாதளத்தில் இருந்தது. ஏகப்பட்ட கடன்கள்.. தவறான முதலீடுகள்.. கிட்டத்தட்ட கழுத்தை நெரித்து விழிபிதுங்கும் நிலையில் இருந்திருக்கிறார் டீசல்.

இது வெளியுலகுக்குத் தெரிந்து, அவமானம் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பியதால்தான் ருடால்ஃப் டீசல் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அவர் செய்தது தற்கொலையைதான் என்பதற்கு அவரது பாக்கெட் டைரியில் அவர் காணாமல் போனதினமான செப்டம்பர் 29_ல் சின்னதாய் பென்சிலால் போடப்பட்டிருந்த பெருக்கல் குறிதான் ஆதாரம்!.

quelle-kumutham