Sunday, October 26, 2014

சாரதாம்பாள்: சரித்திரம் மறந்து விட்டதொரு நாழிகை

- நந்திவர்மன்

[பெப்ருவரி 2004, பதிவுகள் பதிப்பில் வெளியான அரசியற் கட்டுரை]

சாரதாம்பாள் சரவணபவானந்த குருக்கள் என்னும் மூன்று வயதுக் குழந்தையின் தாயொருத்தி ஸ்ரீலங்காக் கடற்படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப் பட்ட சம்பவம் சாரதாம்பாள் ஒரு தமிழ்ப் பெண்மணி என்னும் காரணத்தினால் சரித்திரத்திலொரு புள்ளியாக மறக்கப்பட்டு விட்டது.

அண்மைய பத்திரிகைகளின் அறிக்கைகளின்படி ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் பணிந்துரையின் பேரில் மேற்படி சம்பவத்தை விசாரணை செய்து வந்த மனித உரிமைகளிற்கான அமைப்பு போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் இதற்கான கோப்பினை மூடிவிட முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இது பற்றி விசாரித்து வந்த ஸ்ரீலங்காக் குற்றப் புலனாய்வுத்துறையினராலும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வளவிற்கும் சாரதாம்பாளின் சகோதரரான சந்திரசேகர ஐயர் ராஜசேகர சர்மாவின் சாட்சியத்தின்படி மேற்படி சம்பவம் நடைபெற்ற தினமன்று இரவு எட்டரை மணியளவில் பலவந்தமாக வீட்டினுள் புகுந்த கறுப்புடை அணிந்த படையினர் எனச்சந்தேகிக்கப் படும் சிலர் இவரைத் தாக்கிக் கண்களைக் கட்டி வீட்டின் பின்புறம் கொண்டு சென்றதாகவும், அவர்களில் இருவர் இவரது சகோதரியான இருபத்தொன்பது வயதான சாரதாம்பாளினை அருகிலுள்ள கைவிடப்பட்டநிலையிலிருந்த வீடொன்றிற்கு இழுத்துச் சென்றதாகவும் அறியக் கிடக்கின்றது. இவ்வாறு இழுத்துச் சென்றவர்கள் சிங்களம் கலந்த தமிழில் கதைத்ததாகவும் சந்திரசேகர ஐயர் ராஜசேகர சர்மா கூறுகின்றார். சாரதாம்பாளின் உடலைப் பரிசோதித்த கொழும்பு சட்ட வைத்தியர் சாரதாம்பாளின் உடலில் காணப்படும் காயங்கள் மற்றும் கீறல்கள் அனைத்தும் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப் பட்ட பெண்ணொருத்தியின் உடலில் காணப்படும் காயங்கள், கீறல்கள் போன்றேயிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சாரதாம்பாளின் உடல் மறு நாட் காலை, அவரது வீட்டிலிருந்து இருபது மீட்டர்கள் தொலைவிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயம் அருகில் காவோலைகளால் மூடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப் பட்டது. பத்தினித் தெய்வத்தின் ஆலயத்தின் அருகில் நடைபெற்ற மேற்படி சம்பவம் மனித நேயம் கொண்ட அனைவரையும் உலுக்கி விட்டது. சிலம்பிற்காக மதுரையை எரித்த கண்ணகி மட்டுமின்று இருந்திருந்தால் இதற்காக இலங்கையை எரித்திருப்பாளோ? மேற்படி சம்பவம் நடைபெற்ற டிசம்பர் 28,1999 அன்று புங்குடுதீவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஸ்ரீலங்காப் படையினரால் மன்னாரில் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட விஜயகலா நந்தகுமார், சிவமணி சின்னத்தம்பி வீரக்கோன் (மார்ச் 19,2001), கனடா வருவதற்காகக் காத்திருந்தபோது குழுவாகப் படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப் பட்ட கோண்டாவிலை சேர்ந்த இருபத்தி மூன்று வயதான ராஜனி வேலாயுதப் பிள்ளை (ஒக்டோபர் 3, 1996), கடத்தப் பட்டுப் புத்தூர் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினரால் குழுவாகப் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க பட்ட அச்சுவேலி மகாவித்தியாலய ஐந்தாம் வகுப்பு மாணவியான தேனுகா செல்வராஜா (நவம்பர் 2,1996), அம்பாறைச் சென்ரல் முகாமைச் சேர்ந்த படையினரால் பாலுறுப்பில் கிரனேட் எறிந்து படுகொலை செய்யப் பட்ட நான்கு குழந்தைகளின் தாயான திருமதி முருகேசம்பிள்ளை கோணேஸ்வரி ( மே 17,1997), மட்டக்களப்பு தன்னமுனையில் நான்கு படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட முப்பத்தியெட்டு வயது விதவைப் பெண்ணான வேலன் ராசம்மா மற்றும் அவரது சகோதரியான இருபத்தியெட்டு வயதான நல்லையா தர்சினி ( மார்ச் 17,1997), பாலியல் வல்லுறவிற்குள்ளாக்ப்பட்டுப் படுகொலை செய்யப் பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இவ்விதம் ஸ்ரீலங்காப் படையினரால் தமிழ்ப் பெண்கள் மேல் பிரயோகிக்கப் படும் பாலியல் ரீதியிலான வன்முறைகளும் படுகொலைகளும் தொடரத்தான் செய்கின்றன.

இதற்கு முடிவுதான் எப்போதோ?

ஆனால் அண்மைக் காலமாகத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் அக்கறை ஏற்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. கமலஹாசனின் 'தெனாலி'யில் கமல் இலங்கைத் தமிழராக இலங்கைத் தமிழில் பேசி நடித்திருக்கின்றார். இலங்கைத் தமிழ் புரியவில்லையே என்று கவலைப்ப்படும் தமிழக இலக்கிய வாதிகளே உஷார். மேற்படி தமிழ் தமிழக மக்களிற்கு நன்கு புரிந்திருக்கின்றது. அதன் விளைவாகத் தான் படம் வெள்ளி விழா கண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. மேற்படி திரைப்படத்தில் கமலின் நிலமைக்கு அவரது தாயார் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவே காரணமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் தெனாலிக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அதன் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக 'சுப்பர் ஸ்டார்' ரஜ்னிகாந்தும் 'எரியும் இலங்கை'யைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அண்மையில் மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்ற செல்வி ஜெயலலிதாவும் இலங்கைப் படையினரால் அடிக்கடி தாக்கப் படும் , படுகொலை செய்யப் படும் தமிழக மீனவர்கள் காரணமாக மீண்டும் கச்சதீவினைப் பெறுவோமெனப் போர்க்குரல் ஒலித்திருக்கின்றார். ஆக மீண்டும் தமிழக அரசியலில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாகத் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பெண்கள் விடயத்தில் தீவிர கவனம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததொன்று. இன்னுமொரு பெண்ணான ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் அரச படையினரால் பாதிப்பிற்குள்ளாக்கப் படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களிற்காகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுப்பாரென எதிர்பார்ப்போம்.

- நந்திவர்மன் 
- பெப்ருவரி 2004, பதிவுகள் -

Sunday, August 03, 2008

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

1.10.1928 ஆம் ஆண்டு பெற்றோர்கள் தந்தை சின்னையா மன்றாயருக்கும் அன்னை ராஜாமணி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் வி.சி. கணேசன் (எ) நடிகர் திலகம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன். இவர் பிறந்த சமயம் தந்தை சின்னையா மன்றாயர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் சிறை சென்றிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்பொழுது சிவாஜி அவாகள் நாலரை வயது சிறுவனாய் வளர்ந்திருந்தார்.

இவருக்கு ஏழு வயது நடக்கும்பொழுது தன் தந்தையுடன் கட்டபொம்மன் நாடகம் பாக்கச் சென்றார். நாடகம் நடத்துபவர்கள் வெள்ளைக்கார பட்டாளத்திற்கு ஆள் போதவில்லையென்று கணேசனை மேடையேற்றினர். அதுவே இவரின் முதல் நாடகம். ஆர்வமாய் நடித்தார். ஆனால் தந்தையாருக்கோ தான் எதிரியாக நினைக்கும் வெள்ளைக்காரர் படையில் மகன் நடித்து விட்டானே என்று கோபம். வீட்டிற்கு வந்ததும் என் எதிரியின் படையில் சேர்ந்து எப்படி கூத்தாடலாம் என்று அடித்தார். அன்றுதான் நாமும் ஏன் பெரிய நடிகனாக ஆகக் கூடாது என்ற வைராக்கியம் கணேசனின் மனதில் தோன்றியது. அந்த நேரத்தில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியான மதுரை ஸ்ரீபாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டிருக்க - தனது நடன, பாட்டு ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி தான் அனாதை என்று கூறி, அவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தி, நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.
அங்கு காலை ஏழு மணிக்கு எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு முதலில் பாட்டு இரண்டாவது டான்ஸ். அடுத்தது அன்று நடக்க வேண்டிய நாடகத்திற்கு வேண்டிய உரையாடல்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டும். இந்த முறைப்படியான பயிற்சி இவரை பெண் வேஷம் போடுவதிலிருந்து ஆண் வேஷம் அணிந்து நடிக்கும் 'ராஜபார்ட் நடிகர்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

இந்த காலகட்டத்தில் இவரின் மூத்த இரு அண்ணன்கள் அடுத்தடுத்து இறந்தனர்.இச செய்தி தெரிந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் கணேசன் இருந்தார்.

வி.சி.கணேசன் அவர்களுடன் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் போன்ற எல்லா ரோல்களிலும் நன்றாக நடிக்கக் கூடிய நடிகர்கள் இருந்தனர்.
நாடகக் கம்பெனி பரமக் குடியில் முகாமிட்டிருந்தபொழுது கர்ம வீரர் காமராஜரைச் சந்திக்கும் வாய்ப்பு கணேசன் அவர்களுக்கு கிட்டியது.

இவரின் நாடகக் குழு குமாரபாளையம் என்ற ஊரில் முகாமிட்டிருந்த பொழுது, மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது... கணேசன் உட்பட நாடகத்தில் நடிக்கும் பிள்ளைகளெல்லாம் - பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஆற்றில் வெள்ளம் வர - தண்ணீரிலிருந்து வெளியே ஓடி வர முடியாமல் கணேசன் உட்பட அனைவரும் தவித்துப் போனார்கள் அந்த ஊர் பெரியவர்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றினார்கள்.

இவர்களின் நாடகக்குழு கோயமுத்தூரில் முகாமிட்டிருந்த பொழுது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படம் எடுப்பதற்காக அங்கு ஒரு ஸ்டூடியோவில் தங்கியிருந்தார். அவர் லோகிதாசன் வேஷத்திற்கு ஒரு நடிகரைத் தேட, நாடகக் குழுவினர் கணேசனையும் காகா ராதாகிருஷ்ணனையும் அவரிடம் கொண்டு சென்று காட்டினர் அவர் அந்த வேஷத்திற்கு பொருத்தமானவர் என்று காகா ராதா கிருஷ்ணனை தேர்வு செய்தார். வீட்டிற்கு தெரியாமல் ஓடி வந்து நடிப்பின் ஆசையால் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தொடர்ந்து நடித்து பாராட்டுக்களைப் பெற்ற கணேசனுக்கு வீட்டின் நினைவு அதிகமாக வரத் தொடங்கியது. அதனால் "தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கணேசன் நாடகக் கம்பெனிகாரர்களிடம் தொந்தரவு செய்தார். அதனால் அவர்கள் கணேசனை தங்கவேலுடன் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். இருவரும் திருச்சி வந்து சேர்ந்தார்கள். திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்த கணேசன் முதலில் பாணத்தது அவரது தங்கை பத்மாவதியையும், தம்பி சண்முகத்தையும்... இரண்டு பேரும் பெரியவர்களாக வளர்ந்திருந்தார்கள். அந்த வருடம் அப்பா, அம்மா, அண்ணன் தங்கவேலு தம்பி சண்முகம் தங்கை பத்மாவதியுடன் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடினார்.

பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியிலிருந்து விலகி எம்.ஆர். ராதா 'சரசுவதி கான சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பிக்க - எம்.ஆர். ராதா அழைப்பின் பேரில் வி.சி. கணேசன் அந்த கம்பெனியில் சேர்ந்தார். கணேசனை சென்னைக்கு அழைத்து வந்த எம்.ஆர். ராதா அவரை சென்னையைச் சுற்றி பார்க்க வைத்தார்.

சரசுவதி கான சபாவினர் 'லட்சுமிகாந்தன்', 'விமலா'. 'விதவையின் கண்ணீர்' போன்ற புதிய நாடகங்களை நடத்தினார்கள். ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் தியேட்டரில்தான் இந்த நாடகங்கள் நடந்தன. அப்பொழுதுதான் தந்தை பெரியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கணேசனுக்குக் கிடைத்தது.

காலையில் எழுந்ததும் குளித்து விட்டு பெரியாரின் வீட்டிற்கு சென்று விடுவார் கணேசன். அங்குதான் பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் சினேகிதமும் பெரியாரின் மீது ஒரு ஈடுபாடும் கணேசனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஈரோட்டில் ஆரம்பத்தில் - வரவேற்பு பெற்ற எம்.ஆர். ராதா நாடகங்கள் பின்னர் வசூலில் குறைய ஆரம்பிக்க பார்ட்னாகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு நாடகம் நிறுத்தப்பட்டது. எம்.ஆர். ராதா மட்டும் கம்பெனியை விட்டு விலகி ஊருக்குச் சென்று விட்டார்.

நாடகம் தொடாந்து நடக்காததால் கணேசனுக்கும் அவருடன் தொடர்ந்து நடிக்கும் நாடக நடிகர்களுக்கும் சாப்பாட்டு பிரச்சனை ஏற்பட்டது. ஊரைச் சுற்றி உள்ள வயல்காட்டு தோட்டப் பகுதியில் விளைந்திருந்த சேனைக் கிழங்கை தோண்டி எடுத்து சாப்பிட்டு சமாளித்தவர்கள்- தாங்களே ஒரு நாடகம் நடத்தி அதில் மக்கள் கொடுத்த பணத்தை வைத்து திருச்சி போய் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு நாடகமே நடிக்காமல் வீட்டில் சும்மா இருந்த கணேசன் அவர்கள் திருச்சியில் 'ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்' என்ற கம்பெனியில் ஏழு ரூபாய் சம்பளத்தில் மெக்கானிக்காக வேலையில் சேர்ந்தார்.அவர் தன் அம்மாவிடம் கொடுத்த அந்த சம்பள பணம் குடும்பத்திற்கு அன்று பேருதவியாய் இருந்தது.

கணேசன் நாடகத்தில் நடிக்கவில்லையே தவிர கவனம் அதிலேயே இருந்தது. நண்பன் ஒருவன் அழைக்க அம்மாவின் அனுமதியுடன் மீண்டும் சரஸ்வதி கான சபாவில் போய் சேர்ந்தார்.

சரஸ்வதி கான சபா நாடக வசூல் குறையத் தொடங்க என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் முன் வந்து நாடகக் கம்பெனியை வாங்கி 'என்.எஸ்.கே. நாடகக் கம்பெனி' என்று பெயர் வைத்து 'ரத்னாவளி', 'மனோகரா' போன்ற நாடகங்களை நடத்தி வந்தனர். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறை செல்ல - அதன் பிறகு என்.எஸ்.கே. நாடகக் கம்பெனியை யார் நடத்துவது என்ற பிரச்னை எழுந்த போது கம்பெனியில் இருந்த எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி ஆகிய இரண்டு பெரிய நடிகாகளில் எஸ்.வி. சகஸ்ரநாமத்திடம் கம்பெனி பொறுப்பை டி.ஏ. மதுரம் ஒப்படைத்தார். இதனால் கே.ஆர். ராமசாமி ஒரு தனி நாடகக் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணேசன் - மற்றும் உடன் நடிக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார். அது திராவிடர் கழகம் மிக மும்முரமாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த காலம்.

1946 ஆம் ஆண்டு சென்னையில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடந்தது... அதில் பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. அதில் அண்ணா காசுபட்டராகவும். கணேசன் சிவாஜியாகவும் இணைந்து நடித்தனர். அந்த நாடகத்தைப் பார்த்த ஈ.வெ.ரா. பெரியார் "இந்த நாடகத்தில் யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜி வேஷத்தில் நடித்திருந்தானே அவன் யார்?" என்று கேட்டார். கணேசனை அவரெதிரில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

'நீதான் கணேசனா? இன்று முதல் நீ சிவாஜி' என்று ஈ.வெ.ரா பெரியார் பாராட்டி 'சிவாஜி' என்ற பட்டத்தை கணேசனுக்கு வழங்கினார். அன்று முதல் வெறும் கணேசன் 'சிவாஜி கணேசன்' ஆனார்.

courtesy: www.lakshmansruthi.com

Tuesday, April 08, 2008

என் கணவர் - செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"
என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிýருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிýருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிýருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை þþ எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை þþ இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Friday, March 28, 2008

ஒரு மொழியின் இறப்பு

பதிப்பு: - வி.சபேசன்

கடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. கடந்த திங்கட் கிழமையோடு உலகில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.

"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்..

Friday, March 21, 2008

திருமணம்

- மூர்த்தி -

திருமணம்:


திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

அருகு-மணை எடுத்தல்:

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

பிள்ளையார் வழிபாடு:

மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

முகூர்த்தக்கால் நடுதல்:

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:

அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:

1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:

1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.

மஞ்சள், மருதாணியின் சிறப்பு:

1. குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

2. மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.

3. மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.

4. கை, கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:

இது மிகத் தொன்மையான பழக்கமாகும். கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்குக் கொடுக்கின்றோம் என இருவீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:

கணவன், கொழுநன்:

கண் அவன். பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும். நம்மை நல்வழி நடத்திச் செல்லும் கண்ணைப் போல் பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

மனைவி:

மனைவி, துணைவி, இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.

கொழுந்தனார்:

கொழுநன் அன்னார்= கொழுந்தனார். கொழுந்தனார் கணவனின் தம்பியைக் குறிப்பது. உன் கண்ணைப்போல் இக்குடும்பத்தில் உரிமை உடையவன் என்பதாகும்.

விளக்கு வகைகள்:

1. வெண்கல விளக்கு ஏற்றினால்- பாபம் போகும்.
2. இரும்பு விளக்கு ஏற்றினால்- அபமிருத்யுவைப் போக்கும்.
3. மண்விளக்கு ஏற்றினால்- வீரிய விருத்தியை அளிக்கும்.

குறிப்பு: மண்ணால் செய்யப்பட்ட அகல் அல்லது வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆன விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்ததாகும். பஞ்சலோகமானது தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு ஆகும். ஐம்பொன் என்றும் சொல்வதுண்டு.

தீபங்களும் திசைகளும்:


1. கிழக்குத்திசை: கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும்.

2. மேற்குத்திசை: மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.

3. வடக்குத் திசை: வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.

4. தெற்குத்திசை: தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது!

முகங்களுக்குரிய பலன்கள்:

1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால்- மத்திம பலன்.
2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும்.
3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும்.
4. நான்கு முகங்கள் ஏற்றுவதால்- பசு, பூமி, பாக்கியம் தரும்.
5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால்- செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.

குறிப்பு: விசேட காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.

தீப வழிபாடு:

அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

புரோகிதர், புரோகிதம்:

புரோகிதர் என்றால் முன் நின்று நன்மையைச் செய்கின்றவர் என்று அர்த்தம். புரோ= முன், கிதம்= நன்மை.

ஆபரணங்களால் ஏற்படும் நன்மைகள்:

தங்கம், வெள்ளி நகைகள் அணிவதால் உடல் நலம் சிறக்கும். தங்கம் உடலுக்குச் சூட்டையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்கின்றது. தங்கத்துடன் செம்பு சேர்த்து ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன. செம்பு சூரியக் கதிர்களை இழுத்து உடலில் படவைக்கின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும். ஆயுர்வேத முறைப்படி இரத்த சுத்தி, மூளைவளர்ச்சியை அதிகப்படுத்துதல், உடலுக்கு நிறம் கிடைத்தல் ஆகியவை தங்கத்தால் கிடைக்கும். வலது கைவிரலில் மோதிரம் அணிந்து சாப்பிடும்பொழுது தங்கத்தின் மிகச்சிறிய பகுதி உடலுக்குள் செல்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி நகைகளால் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும்.

ஆலத்தி எடுத்தல்:

* மங்கள மங்கையர் மணமானவுடன் மஞ்சள் நீர் உள்ள தட்டை மணமக்கள் முன் சுற்றி வாழ்த்துவர்.

* மஞ்சள் நச்சுப் பொருட்களை மாற்றவல்லது. மஞ்சள் திருநீறு இட்டு ஆலத்தி எடுத்து வாழ்த்துவது நச்சுத்தன்மையை நீக்கும்.

* மஞ்சள் நீர் போன்று உங்கள் வாழ்வில் வலம் வரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுவதாக என்று அர்த்தம்.

வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:

1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.

Friday, February 15, 2008

காலம் காலமாக ஓவியத்தில் பெண்கள்

ஓவியமோ வேறு எந்தக் கலைவடிவமோ அது சார்ந்த சமூகத்தின் மனப்பாங்கை பிரதிபலிப்பதாக அமைபவை. கவிதை, நாடகம், ஓவியம், சிற்பம் எனப் புராதன வரலாற்றைக் கூறிநிற்கும் கலை வடிவங்கள் அனைத்திலுமே அக்காலகட்டத்தின் சமூக வாழ்வைத் சித்திரிக்கக்கூடியதாக இருக்கின்றதெனினும் இவை ஆண்களால் ஆக்கப்பட்ட, நிலைநிறுத்தப்பட்ட சமூகக் கட்டுமானங்களை ஆண்களே வெளிப்படுத்தியவையாகவே உள்ளன. வாய்மொழியூடாகவும் கைப்பணிப் பொருட்களூடாகவும் தனித்தனியாகவும் வெளிப்படுத்தப்பட்ட பெண்களது குரல்கள் நிலைத்து நிற்கக் கூடிய பொருட்களில் ஆக்கப்படாததாலும் கைப்பணிப் பொருட்களில் பதியப்படாததாலும் ஆணாதிக்க அரசுகளின் பிரதான கலை வெளிப்பாட்டு செயற்பாடுகளில் இணைக்கப்படாமலும் விடப்பட...

அவை இன்று வரலாற்றுக் காலத்திற்குரியனவாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கால ஓட்டத்தில் இயற்கையாலோ மனிதராலோ அழிக்கப்படாது இன்றும் எஞ்சியிருக்கும் பண்டைய வரலாற்றைக் கூறிநிற்கும் ஓவிய சிற்பங்களுக்கு இடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் எவ்வாறு நோக்கப்பட்டாள் என்று பார்ப்போமானால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் முதல் நாகரிகங்கள் உருவான காலம் வரையான மனிதகுல வரலாற்றின் சான்றுகளாகப் பெறப்பட்ட குகை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் வளத்திற்குரிய சந்ததிப் பெருக்கத்திற்குரிய குறியீடாகவே பெண் சித்திரிக்கப்படுகிறாள்.

எகிப்திய ஓவியங்களைப் பார்த்தால் அவையனைத்தும் அரசனது வாழ்வுக்கும் மறுவாழ்வுக்கும் உதவுவனவாகவும் அவனது புகழ் பாடுவனவாகவும் அமைகின்றன. இதுபோன்ற மெசப்பத்தோமிய சீன நாகரீகங்களாயினும் பின்னர் ஐரோப்பிய நாகரீகத்தின் முன்னோடிகளாகக் கூறப்படும் கிரேக்க ரோமானியக் கலைகளாயினும் அரசனதும் நாயகர்களதும் வாழ்வையும் போரையும் வீரத்தையும் சித்திரிக்கின்றனவேயன்றி தமது ஆளுமையால் வரலாற்றில் தடம் பதித்த பெண்கள், அரசிகள் பற்றிய ஓவியங்களையோ சிற்பங்களையோ கொண்டிருப்பதென்பது அரிதாகவே உள்ளன.சிந்துவெளி நாகரிகத்துக்குரிய மரபிலும் கலைவடிவங்கள் அரசர்களால் செய்விக்கப்பட்டவையே. ஆண் தெய்வங்களதும் புராண நாயகர்களதும் அரசர்களதும் கதையாக இவை அமைய இவர்களின் நாயகிகளாகவும் அலங்காரப் பொருட்களாகவும் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சக்தி வழிபாடு போன்ற வடிவங்கள் தவிர்ந்த ஏனைய பெண் வடிவங்கள் தெய்வங்களாகவோ தேவதைகளாகவோ சித்திரிக்கப்படினும் அவற்றினூடே அக்காலத்து வாழ்க்கை முறை, ஆடை அணிகலன்கள் கட்டடங்கள் போன்றவற்றையும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவற்றிலும் பெண்கள் அழகுப் பொருட்களாக, அலங்காரப் பிரியைகளாக, தாய்மாராக, ஆணிற்கும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

அஜந்தா சிகிரியா ஓவியங்களில் தாயாகவும் அரசர்களின் நாயகிகளாகவும் சித்தரிக்கப்படும் பெண் ஐரோப்பிய மத்தியகால கிறிஸ்தவ ஓவியங்களில் கன்னி மேரியாக கிறிஸ்துவின் தாயாக சித்திரிக்கப்படுகிறாள். . இவ்வாறாக ஒரு காட்சியினுள் பெண் இடம்பெறுவதைத் தவிர வேறுவிதமாகவும் அவள் சித்திரிக்கப்பட்டுள்ளாள். உலகின் எந்தப் பகுதியாயினும் வரலாற்றின் எக்காலப் பகுதியாயினும் பெண்ணை செடி, கொடி, மலர், விலங்கு, பறவை என்பவற்றுடன் ஒன்றாக அலங்காரக் கூறாகப் பாவிக்கும் வளக்கமும் இருந்து வருகிறது.பெண்ணை அலங்காரப் பொருட்களுள் ஒன்றாகப் பார்க்கும் இந்த ஆண் பார்வையின் அடுத்த கட்டமாகவே ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்திற்குரிய பெண் பிரதிமை ஓவியங்களை, பெண்களை சித்திரிக்கும் முறை என்பவற்றைக் கருதலாம். அவர்கள் தமது விருப்பத்திற்குரிய காட்சிகளையும் புராண இதிகாச நாயக நாயகிகளாகவும் தம்மையும் தம் துணைவியரையும் வரைவித்ததுடன் பிரதிமைகளையும் ஆக்குவிக்கின்றனர். மறுமலர்ச்சிக் காலத்தின் பின் ஐரோப்பிய ஓவிய மரபு பல மாற்றங்களைப் பெற்றது. பல பாணிகளாக உருவெடுத்தது.

ஓவியத்தினுள்ளான வர்ணங்கள், உருவங்கள், பரிமாணங்கள் கருப்பொருள் சார்ந்த எல்லாக் கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு நவீனத்துவம் உருவாகிறது.ஓவியம் என்பது உணர்வுகளின் வெளிப்பாடாக அமைவது. உணர்வுகளின் நேரடிக் காட்சிப்படுத்தல்களாகவோ அல்லது வேறுவடிவங்களிலோ கலைஞன் தாம் நினைப்பதை, கற்பனை செய்வதை வெளிப்படுத்துவது இதற்குத் தடையாக இருந்தவையான ஒவ்வொரு ஓவிய மரபு சார் தடைகளையும் நவீன ஓவியம் உடைக்கிறது.நேரடித் சித்திரிப்பாக இல்லாது பாரம்பரியமாக கைப்பணிப் பொருட்களின் பாய்கள் துணிகளோடு பின்னப்பட்ட பெண்ணின் உணர்வுகள் வீட்டின் சுவரிலும் தரையிலும் மட்பாண்டங்களிலும் தீட்டப்பட்ட கோலங்கள் கலை வரலாற்றில் பெண்களால் இயற்றப்பட்டவை என்று பதியப்படாது விடப்படினும் பாரம்பரியமான அந்தக் கலை உணர்வும் திறனும் நவீன ஓவியத்தோடு பெண்களுக்கு பொது ஓவிய உலகிற்கு கிடைத்த வெற்றியுமாக இன்று தம்மை, தமது உணர்வுகளை தமது உலகு பற்றிய பார்வையை வெளிப்படுத்தும் பல பெண் ஓவியர்கள் உலகெங்கும் உருவாகியுள்ளனர். கலை ஒரு தொடர்பு ஊடகம் என்ற வகையில் பெண்ணின் ஆளுமை, பெண் சிந்தனை, பெண்ணின் கற்பனை என்பன இந்த ஓவியர்களோடு பொது மேடைக்கு வருவதன் மூலம் ஓவியம் என்ற ஊடகத்தில் காலம்காலமாக பெண் பற்றி உருவாக்கப்பட்டிருந்த படிமங்கள் உடைக்கப்படுகின்றன. அத்துடன் வரலாற்றை எழுதியவர்களால் விடப்பட்ட பெண்களது கலை வரலாற்றை மீள எழுதும் பணிகளும் உலகின் பல இடங்களிலும் தொடங்கி விட்டன. நாமும் எமது பிரதேசம் சார்ந்த இதேவகையான சிந்தனையை முன்வைப்பது அவசியமாகின்றது.

Quelle - வீரகேசரி

Thursday, February 07, 2008

உளவியல் சார்ந்த பெண்ணின் விருப்பம்

- டாக்டர் என். ஷாலினி

தனக்கென்று ஒரு தோதான துணை அமையாவிட்டால் பெண்கள் எல்லாம் சட்டென ஆட்ட விதிகளை மாற்றி அடுத்து உபயோகிக்கும் யுத்தி நம்பர் டூ தான் ஜகோஸ்டாயிஸம்.எடிபெசுக்குத் தன் தாயை அடையாளம் தெரியவில்லை, ஓகே. ஆனால் ஜகோஸ்டா? அவளுக்குத் தன் மகனை அடையாளம் தெரியாதா? குறைந்த பட்சம் தன் மகன் வயதை ஒத்த ஒருவனோடு வாழ்வதாவது அவளுக்குத் தெரிந்திருக்குமே! இருந்தும் அவனைப் பயன்படுத்தித் தன் நாட்டைப் பாதுகாத்துத் தன் மரணுக்களையும் பரப்பிக் கொண்டாளே - அது தான் ஜகோஸ்டாயிஸம் என்பது!

மனிதப் பெண் தன் ஆண் துணையை இழக்க நேர்ந்தால் - அது வேலை, வியாதி, வேறொருத்தி, யமன் என்று எதற்காக வென்றாலும், அவள் அடுத்த கட்ட நடவடிக்கையாக இழந்த துணையின் இடத்தில் இன்னொரு இளைஞனை ஏற்றி விடுகிறாள்.
அந்த இளைஞன் அவள் எல்லாம் தெரிந்த விவரமான பெண்மணித்தனத்தைக் கண்டு மையல் கொண்ட ஒரு காதலனாக இருக்கலாம். அப்படியானல் இந்த உறவில் கலவியும் ஓங்கிவிடும்.

அவளுடைய கலவியில் ஞானமும் அதுவரை அவள் சேகரித்து வைத்திருந்த வளங்களும் அந்த இளைஞனை ஈர்க்கும். அவனுடைய புதிய மரபணுக்களும் அவனால் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பாதுகாப்பும் அவளை ஈர்க்கும். இப்படி நிகழ்வதுதான் ஜகோஸ்டாயிஸம் - முதல் வகை அல்லது அந்த இளைஞன் அவளுடைய சொந்த மகனாகவே இருக்கலாம். அப்படியானால் இந்த உறவில் கலவி நிகழாது.

மகன் வயதிற்கு மீறிய பெரிய மனிதத்தனத்தைச் சிறுவயதிலேயே பெற்றுப் பொறுப்பானவனாய் மாறுவான். அவன் அம்மாவிற்குப் பாதுகாப்பும் ஒரு ஒப்புக்குச்சப்பான கணவனின் கவனமும் கிடைக்கும். இதுதான் இரண்டாம் வகை ஜகோஸ்டாயிஸம்.
கவர்ச்சியும் துணிவுமுள்ள பெண்கள் முதல் வகை ஜகோஸ்டாயிஸத்தைக் கையாள்கிறார்ள். கவர்ச்சியும் துணிவும் குறைவான பெண்கள் இரண்டாம் வகை ஜகோஸ்டாயிஸத்தை கையாள்கிறார்கள்.



ஆனால், இந்த இரண்டு வகை ஜகோஸ்டாயிஸத்திலுமே சில பாதக விளைவுகள் உண்டு. ஒன்று, இந்த மாற்று கணவன், முந்தைய கணவனைப் போலவே அவளை விட்டுவிட்டு வேறு திசை போய்விடும் அபாயம் இருந்தது. அதிலும் குறிப்பாக முதல் வகை ஜகோஸ்டாயிஸத்தில் இந்த ஆபத்து நிறையவே இருந்தது. புதுக் காதலன் பழகிய பால் புளித்தது என்று வேறு பால் பாண்டத்தைத் தேடிப் போய்விடக் கூடும் அல்லது அவளை ஏமாற்றி அவள் வளங்களை எல்லாம் உறிந்து கொண்டுவிடக் கூடும்.



எந்தவித ரத்த பந்தமும் பிணைக்காத ஜகோஸ்டாயிஸம் முதல் வகையில் இப்படி நேரச் சாத்தியக் கூறுகள் அதிகமே.
அதனால் தான் பெண்கள் எல்லாம் இரண்டாம் வகை ஜகோஸ்டாயிஸத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் தாய், மகன் என்கிற ரத்த பாசம் அவர்களைக் காலம் முழுவதும் கட்டிவைக்குமே! இந்த ரத்த பந்தம் கலவியல் பந்தத்தைவிட உறுதியானது என்பதால் மகன் தன் தாய்க்கு எப்போதுமே உண்மையாக இருக்க முயல்வான்.

ஆனால், இந்த உறவிலும் பாதக விளைவுகள் இல்லாமல் இல்லை.
தாய்ப்பாசமிக்க மகன் தனக்கென்று ஒரு துணை வந்தவுடன் மனைவி பக்கம் சாய்ந்துவிடும் சாத்தியம் உண்டே. இதனால் தாய் தன் ஆண்மையை இழக்கலாம். தனக்கென்று ஒரு தரமான துணை அமையாத தாய்மார்களின் மிகப் பெரிய பயமே இதுதான். இந்த மருமகள் என்கிற நேற்று வந்தவள் தனது அருமை மகனையும் அவனால் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களையும் தன்னிடமிருந்து பிரித்துவிட்டால், பிறகு அந்த அம்மையாரின் கதி?



இந்த வம்பே வேண்டாம் என்று தான் அநேக அம்மாக்கள் தங்கள் மகனைத் தன்னோடு இணைக்கும் தொப்பிள் கொடியை அறுத்திடாமல் அப்படியே தொடர்ந்திடச் செய்கிறார்கள். வளர்ந்த பிறகும் தன் மகனைக் குழந்தை மாதிரி பாவித்து, உணவு பரிமாறி, உடை பாரமரித்து, அவனைச் செல்லம் கொஞ்சுகிறார்கள். இப்படி எல்லாத்துக்கும் அம்மா தான் வேணும்! என்கிற சிறுபிள்ளைத்தனத்தை நீடித்துவைத்து, இன்றியமையாத முக்கிய நபர்களாய்த் தங்கள் அந்தஸத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.



இப்படி மகனைக் குழந்தை மாதிரி வைத்திருப்பது அவன் திருமணத்தைத் தள்ளிப்போடவும் சரியான சாக்காகிவிடுவதால் இந்தத் தாய்க்குலத்திற்குத் தன் தனயனோடு அதிக நேரமும் கிடைக்கிறது. அப்படியும் அந்த மகனுக்குத் திருமணம் என்று ஒன்று ஆகி, அவனுக்கே அவனுக்கு என்று ஒருத்தி வந்துவிட்டாலும், சில தாய்க்குலங்கள் இந்த மருமகளோடு தன் மகனை ஒட்டவிடுவதில்லை.

அந்தப் புதிய பெண்ணின் குணம், நடத்தை, ஆளுமை, திறமை, பூர்வீகம், நம்பகத்தன்மை என்று சகலத்தைப் பற்றியும் இடித்துப் பேசி அவநம்பிக்கையை எழுப்பிவிடுகிறார்கள். இப்படியாக அந்த மகனுக்குத் தன் மனைவியை நம்ப முடியாமல் போக என்ன இருந்தாலும் அம்மா மாதிரி வருமா? இவ யாரோ எவளோ! என்று தொடர்ந்து மகன் தாயின் துணையையே நாட, இப்படியே தன் இன்றியமையாத உயர் அந்தஸ்த்தைத் தக்கவைத்துக் கொள்கிறாள் தாய்.

தன் மரபணுக்களைப் பரப்பச் செய்வதிலேயே குறியாக இருக்கும் சமத்தான மகன் அவன் என்றால் உடனே என்றில்லாவிட்டாலும் படிப்படியாகவாவது தன் தாயின் யுத்தியை இனம் கண்டுகொள்வான். அப்புறம் என்ன, தாயுடன் கூட்டுச் சேர்ந்தால் மரபணுக்கள் பரவாதே. மனைவியுடன் சேர்ந்தால்தான் அவன் குலம் தழைக்கும். அதனால் இந்தச் சமர்த்துப் பையன் சட்டென மனைவியோடு இணைந்துவிடுவான்.

இதுவே மிதமிஞ்சிய தாய்ப்பாசத்தினால் குருடாகிப் போன மக்கு மகன் என்றால், தன் தாயின் யுத்தியை அவன் கவனிக்கவே மாட்டான். அதனால் அவனுக்கு மரபணுக்களைப் பரப்பும் வாய்ப்புக்கூடத் தவறிப் போகலாம். மரபணு ஆட்டத்தில் அவன் தோற்றுப் போவான். ஆனால், தன் மகனைத் தக்கவைத்துக் கொண்ட ஆட்டத்தில் அவன் தாயே ஜெயிப்பாள்!

இப்படி மகனைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்தத் தாயின் குணம் சில சமயத்தில் விகாரத் திருப்பங்களும் பெறுகின்றது. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, மாமியார் - மருமகள் தகராறுகள், மருமகள் தற்கொலை / கொலை என்பவை எல்லாம் ஜகோஸ்டாயிஸத்தின் விபரீதமான பரிமாணங்கள்.

இப்படிப்பட்ட மாமியார் கொடுமைகளுக்குப் பின்னால் இருக்கும் உட்காரணத்தைக் கவனமாய் ஆராய்ந்தால், ஒரே ஃபார்முலாதான் வெளிப்படும். மோசமான கணவன் - இன்செக்யூர் தாய் - மகனை மாற்றுக் கணவன் ஆக்குதல் - வெட்டுப்படாத தொப்பிள் கொடி- மருமகளை ஜென்ம விரோதியாய் நினைக்கும் மனப்பான்மை - மருமகள் மீதான குற்றங்கள்.

பொதுவாய் ஜகோஸ்டாயிஸம் ஒரு அர்த்தமுள்ள யுத்தி தான். ஆனால், இதை அப்பட்டமாய உபயோகித்தால் சமுதாயம் அதனைக் கண்டிக்கிறது. அதனால் லேசுபாசாய் இந்த யுத்தியைப் பயன்படுத்தும் பெண்கள் கண்டனத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

மிகவும் வெளிப்படையாய் அல்லது மறைமுகமாக இந்த யுத்தியை உபயோகிக்கும் பெண்களைச் சமுதாயம் கேலவமாய்ப் பார்த்து, வன்மையாய்த் தண்டித்துவிடுகிறது. ஆனால், இந்த ஜகோஸ்டியிஸமெல்லாம் ஏதோ ஒரு எடிபெஸ் வந்து வாய்த்தால் தானே சாத்தியம்? எடிபெஸ் எவனும் அமையாத பெண்கள் என்ன செய்வார்கள்? அது பற்றி அடுத்த தோழியில்!

டாக்டர் என். ஷாலினி, 'மைண்ட்ஃபோக்கஸ்' என்ற உளநலவியல் மையத்தை நடத்திவருகிறார். psrfindia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் டாக்டர் ஷாலினியைத் தொடர்புகொள்ளலாம்

quelle - thozhiyar